Saturday, October 12, 2024

கவிதைதான் குற்றம்

கவிதைதான் குற்றம்

CRIME OF POETRY 
---------
இராஜ முத்திருளாண்டி
*

இன்றுடன் ( அக் 11) பத்தாண்டு. இதே நாள்,  2015ல், நள்ளிரவு கடந்து, 3.30 மணியளவில்,  எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காததொரு பொழுதில் பரம இரகசியமாக அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொரில்லாத் தாக்குதல் நிகழ்த்தப் போவதுபோல – இஸ்ரேலிய ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பு அதிகாரிகளது (Israeli Zionist occupation authorities)  கொடுங்கரமாகச் செயல்பட்டு வரும் எல்லைக் காவல் (Border Guards) அணியினர் புடைசூழ, நாஸரேத் காவல்துறையின் ரோந்து வாகனங்கள், அந்நகரின்  அருகிலுள்ள அல் ரய்னே (Al-Reineh) என்றதொரு சிறு கிராமத்தை முற்றுகையிட்டன. அமைதி போர்த்து நின்ற ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தன அப்படைகள். இன்னும் விடியாத இரவையும், உறங்கி விழிக்காத அவ்வீட்டினர் அனைவரையும் அதிர்ந்துபோகச் செய்து வீட்டின் கதவுகளைத் தகர்த்து  அதிரடியாக நுழைந்தது எதேச்சதிகாரம். 
நுழைந்த அதிகாரம் - வழக்கமான மரபுகள் அத்தனையையும் கனத்த பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கியவாறே – தயக்கம் ஏதுமின்றி, அவ்வீட்டில் பெண்கள் உறங்கும் பகுதிக்குள்ளும் புகுந்து துழாவத் தொடங்கியது. அதிகாரச் சீருடை அணிந்திருந்த அதிகாரிகள் எவரது சீருடையிலும் அடையாளங் காட்டக்கூடிய ‘பெயர் பட்டி’ (Name Badge) காணப்படவில்லை.  அந்த அகாலத்தில், இவ்வளவு களேபரங்களை, அவ்வீட்டில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிகாரப் பிரதிநிதிகளிடம் அவ்வீட்டைச் சோதனையிடவோ, குறிப்பிட்ட யாரையாவது கைது செய்யவோ எந்த ஆவணமும் கிடையாது. யாரும் கேட்கவும் முடியாது. ஏனென்றால், அந்த வீட்டார்  பாலஸ்தீன அரேபியர்கள்.

எக்குற்றமும் செய்தறியாத அவ்வீட்டார் எவருக்கும், என்ன நடக்கிறது? இரவு கழிவதற்குள் இப்படித் தடாலடியாக நுழைந்து வீட்டிற்குள் உறங்குபவர்களைப் பதைபதைக்க வைக்கிறார்களே ஏன்? யாரைத்தேடி வந்தது அந்த அதிகாரப்படை? யாராவது அஞ்சத்தக்க தீவிரவாதியைத் தேடித் தவறான முகவரிக்கு வந்து விட்டார்களா  என்ன? என்ற சந்தேகங்களும் வினாக்களும் வார்த்தைகளாக வெளியில் வர இயலாமல் முடங்கி முட்டி நிற்பது அவர்களது முகங்களில் தெரிய, கலவரப்பட்டு உறைந்து நிற்கிறார்கள் வீட்டினர். 

ஒருவழியாகப்  ‘பேர்’   பெற்றிருக்கும் எல்லைப் படையின் அதிகாரி ஒருவரின் கனத்த குரல் உடைக்கிறது அச்சூழலில் உறைந்து கிடந்த அமைதியை. அவர் உச்சரித்த பெயரைக்கேட்டு உடைந்து நொறுங்கினர் வீட்டாரனைவரும். அதிகாரி உரக்கச்சொன்ன பெயர் - யாருமே எதிர்பார்க்காத -  அக்கம் பக்கத்தில் ‘அமைதியான பெண்’ என     அறியப்பட்டிருந்த- (அப்போது) 33 வயதுள்ள, பொறியியல் பட்டதாரியான  அந்த வீட்டுப்பெண் ஒருவரது பெயர். அந்தப்பெண், டாரின் டட்டூர்(Dareen Tatour). (அந்த அரேபிய மொழிப்பெயர் டாரின் ரற்றூர் என்றும் மொழிபெயர்ப்பாகியுள்ளது.) 


வீட்டினுள்ளே, பெண்கள் உறங்கும் பகுதியில், ஏதுமறியாது- அப்போது நடப்பது எதனையும் எள்ளளவும் எதிர்பாராமல்- உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண்ணை அதிர்ச்சியுற எழுப்பி இழுத்து வருகிறார்கள் படையினர். அவரென்ன தீவிரவாதியா? ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவரா? இல்லையே. அந்தச் சமயம்வரை அவர் எந்தக் கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கூடத் தனிப்பட்ட முறையில் கலந்து பங்கேற்றதில்லை. பள்ளிக்கல்வி முடித்தவுடன் ஏற்பட்ட தன்னார்வத்தால் புகைப்படக் கலைப் (Photography) பயிற்சி பெற்றிருந்த ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில், அவர் வாழ்கின்ற நாஸரேத் மாவட்டப் பகுதிகளில் நிகழ்ந்த ஓரிரு போராட்ட நிகழ்வுகளில் புகைப்படம் எடுத்திருக்கிறார், அவ்வளவுதான். அதற்காகவா இத்தனையும்? ஒன்றும் புரியவில்லை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும்.
கலையாத உறக்கத்தோடு காவல்படையால் இழுத்து வரப்பட்ட அந்த வீட்டின் அமைதிப்பெண் டாரின் டட்டூரைத் தீவிரவாதியாகவே கருதிக் கைவிலங்கிட்டுக் காவல் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாத் தள்ளி ஏற்றிக்கொண்டு – வீட்டிற்குள் அவரது படுக்கை அறையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், ஸ்மார்ட்போன் முதலியவற்றுடன் - அப்பெண்ணை எங்கு, எதற்காகக் கொண்டு செல்கிறோம் என்று  (அடிப்படையாக, முறைப்படி வழங்கப்படவேண்டிய) எந்தத் தகவலுங்கூட வீட்டிலுள்ளவர்களுக்குத் தராமல், உறங்கும் ஊர் விழித்துக் கொள்ளும் முன்பே அங்கிருந்து விரைந்தன முற்றுகைப்படை வாகனங்கள். அந்த வாகனங்கள் அலைக்கழிப்பதுபோல அங்கும் இங்கும் சுற்றி நாஸரேத் காவல்நிலையத்தின் பின் ஒரு ஒதுக்குப்புறமான வாகன நிறுத்துமிடத்தில் பலமணிநேரமாக நிறுத்திவைக்கப்பட்டு அப்பெண்ணை இறங்க வைக்காமல் இடையூறு செய்தும் அவரைத் ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டுக் கிண்டலுங் கேலியும் செய்து வதைப்புக்குள்ளாக்கினர். 

சரி, யார் இந்த டாரின் டட்டூர்? 


மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், அப்போது (2015ல்) அவரது ஊர், அல்லது அதிகம் போனால் அவ்வூருக்கருகிலிருந்த நாஸரேத் நகருக்கு அப்பால் அதிகம் அறியப்படாதிருந்த ஒரு பாலஸ்தீனப் பெண் கவிஞர், புகைப்படக்காரர். அவ்வளவுதான். 
ஆனால், அன்று நடைபெற்ற அதிரடிக் கைது நிகழ்வு; அதனால் அவருக்கு விளைந்த சிறைவாசக்கொடுமைகள்; சொந்த ஊருக்கப்பால், கடும் நிபந்தனைகளுடன் இருக்க விதிக்கப்பட்ட  தனிமை வீட்டுச்சிறை; தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குகள்; வழக்குகளுக்கு மூலகாரணங்களாகச் சேர்க்கப்பட்ட (மிக அசாதாரண) விசயங்கள்; ஒருதலைப்பட்ட நாஸரேத் மாவட்ட நீதிமன்ற விசாரணைகள்; விசாரணைகளின் போக்கு; நீதிமன்றத்தில் நடந்த பிற நிகழ்வுகள்; விசாரணை முடிவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை; மேல்முறையீடு; அதன்மீதான தீர்ப்பு  முதலியன யாவும் அவர்மீது அதீத ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட உதவின. பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், கருத்துரிமைக்கான உலகளாவிய செயலமைப்புகள், சமூக ஊடகங்கள், ஆர்வத்தோடு புதிதாகச் சேரந்த ஆதரவாளர்கள் எனப் பலவகைக் குழுக்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனத்தையும், ஈடுபாட்டையும் நேரடிச் செயல்பாடுகளையும் ஈர்த்தன. அவற்றின் கூட்டு விளைவாகத் தற்போது -  டாரின் டட்டூர்  உலகறிந்த பாலஸ்தீனக் கவிஞராக, பெண்ணுரிமைப் போராளியாக, எதேச்சதிகார எதிர்ப்பாளராக, கவிதையைப் போராட்டக் கருவியாக வடிவமைத்துக்கொண்ட புதுமை கண்டவராக, துணிச்சல்மிக்க பாலஸ்தீனப் பெண் எனும் சர்வதேச அடையாளமாக அவரை மாற்றியிருக்கிறது. 

2015 வரை அமைதியான சிறு கிராமத்து பெண் புகைப்படக்காரர்  டாரின் டட்டூர், சில மாதங்களுக்கு முன் (மார்ச் 7,2024) ஒரு பேட்டியில் (International Association of Democratic Lawyers (IADL) அமைப்பின் March 2024 special issue of the International Review of Contemporary Law,), ‘’எனது கவிதைகளில் பாலஸ்தீனம் என்பது நானே; நானே பாலஸ்தீனம்  ( (Palestine in my poems is me and I am Palestine)’’ என்று நிமிர்ந்து முழங்கும் நிலையடைந்துள்ளார். 

‘நாடகன்று நிற்கும் என் சாளரம் வழியே பாடுகிறேன்’ (I Sing From the Window of Exile) என்ற கவிதைத் தொகுதிக்காக, 2023 ஆண்டிற்கான பாலஸ்தீன புத்தக விருது (The Palestine Book Awards 2023 – Creative Award Winner);  கருத்துச் சுதந்திரத்திற்காக, (Freedom of Expression) நார்வே-ஓஸ்லோ விருது (2020); அதே விசயத்திற்காக (Freedom of Expression)  ஆக்ஸ்பாம் நோவிப் / பென் (OXFAM Novib / PEN) அமைப்புகள் வழங்கும் சர்வதேச விருது (2019); அநீதிக்கெதிராகத் தீரமுடன் கவிதைகளால் களமாடியதற்காக டேனிஷ் நாட்டுப் பரிசு (Danish Carl Scharenberg Prize For standing against injustice through her poetry- 2017); புகழ்பெற்ற ஹிப்ரூ மொழி இணைய இதழான ‘மாயன்’ (Maayan) நிறுவியிருக்கும் ‘போரட்டங்களில் புதுமை’க்கான பரிசு (Prize for creativity in struggle- 2016) என வரிசையாக டாரின் டட்டூருக்கான சர்வதேச அங்கீகாரங்கள், விருதுகள்,பரிசுகள் குவிந்துவருகின்றன.

எதற்காக நடந்ததாம் மறக்க இயலாத அந்த 2015 அக் 11 தடாலடி? 

அந்தநாள் விடியுமுன் நடந்தேறிய அசாதாரண அதிரடி நிகழ்வுக்கான காரணங்கள் பல வாரங்கள் கழிந்தே- 2015 நவம்பர் 2ல், நீதிமன்ற வழக்குப் பதியப்பட்டுத்தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது. அதுவரை அந்நாள் - அக் 11 - நிகழ்வுகளின் மேல் மர்மம்தான் அடர்ந்து கிடந்தது.
வாங்க... தாமதமாக உலகிற்குத் தெரியவந்த அந்தக் காரணங்களைக் காணலாம். 

முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட காரணம் டாரின் தனது முகநூல் பக்கத்தில் இட்டதொரு பதிவு. அதன் பின்புலம் இது: 
நாஸரேத்தைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உயிரியல் துறைப் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த  பாலஸ்தீனியப் பெண் இஸ்ரா அபெத்   (Israa Abed). அவர், அக்டோபர் 9, 2013ல் அபுலா (Afula) என்ற ஊரின் பேருந்து நிலையத்தில், தனது ஊருக்குத் திரும்பக் காத்திருந்தபோது கையில் ஒரு சிறு கத்தி வைத்திருப்பதைக் கண்ட இஸ்ரேலியப் படைவீர்ர் ஒருவர், காரணமில்லாமல் அப்பெண்மீது சந்தேகப்பட்டு  எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், துப்பாக்கியால்  சுட்டார். காரணமேதும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த  பேருந்து நிலையத்தில் இஸ்ரா அபெத் இரத்தம் சொட்டத் தரையில் விழுந்து கிடக்கும் படங்களும் வீடியோக்களும் பல ஊடகங்களில் வெளியானதுதான். அப்படித் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கீழேகிடந்த அந்தப் பாலஸ்தீனப் பெண் இஸ்ரா அபெத்தின் படத்தை இணைத்து, ஜூலை 2014ல், டாரின் அவரது முகநூல் பக்கத்தில், ‘நான்தான் அடுத்த உயிர்த் தியாகி’ ( “I will be the next martyr”) என்ற பொருள்பட, அராபிய மொழியில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் (status) வாசகம் ஒரு காரணம்.

இரண்டாவதாகக் குறிக்கப்பட்டாலும், முக்கியக் காரணம் என முன்வைக்கப்பட்டது யூட்யூப் (YouTube) தளத்தில், (அராபிய மொழியில் “Qawem ya sha’abi, qawemhum” என்ற தலைப்பிட்டு) ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ (“Resist My People, Resist Them”) என்று டாரின் வெளியிட்டதொரு கவிதை. 
எத்தனையோ வகை ( கடத்தல் குற்றம், கொலைக் குற்றம், திருட்டுக் குற்றம் என்பன போன்ற எண்ணற்ற வகைக்) குற்றங்கள் பற்றிய வழக்குகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கவிதைதான் டாரின் டட்டூரின் குற்றமானது (Committing the crime of poetry), விந்தையானது! 
குற்றங்களெனக்  குறிப்பிடப்பட்ட முகநூல் ஸ்டேட்டஸ் பதிவாலும், முகநூல் மற்றும் யூட்யூப் என்ற சமூக ஊடகங்களில் வெளியிட்ட (“Resist My People, Resist Them”  - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ - கவிதை மூலமாகவும், டாரின் டட்டூர் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் (Inciting Violence) என்று அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு புனையப்பட்டது.


யூட்யூப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் - பின்புலத்தில், குற்றத்திற்கு முதன்மைக் காரணமான (அரபு மொழிக்) கவிதையைத் தன் குரலில் டாரின் டட்டூர் வாசிக்க, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) பகுதியில் சில்வாட் (Silwad) என்ற கிராமத்தில் பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்களுக்கும் மேற்குக் கரைப்பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ள (இஸ்ரேலியப்) படையினருக்கும்   - அவ்வப்போது வழக்கமாக - நடைபெறும் மோதல்களில் ஒன்றைக் காணொளிக் காட்சிகளாக விரிக்கிறது அந்த வீடியோ.

நடுநிலையாகவும், உண்மையாகவும் பார்த்தால் டாரின் டட்டூரின் அந்த (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’) கவிதையில் எந்த வன்முறைத் தூண்டுதலும் இல்லை. மிகக் கடுமையானவை என்று சனநாயகக் கருத்துடையவர்களால் விமர்சிக்கப்படும்  இஸ்ரேலிய அரசுச்சட்டங்களின்படி கூட – நேரடியாகக் குற்றமாகக் கருதப்படஉரிய கருத்தோ வாசகமோ அக்கவிதையில் இல்லவே இல்லை என்பதே வெளி்ப்படை. ஆனால், அக்கவிதை பாலஸ்தீன இளைஞர்கள் ஆக்கிரமிப்புப் படையினருடன் மோதல் மேற்கொள்ளும் வீடியோ காட்சிகளின் பின்புலத்தில் கவிஞரால் வாசிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு, அக்கவிதை தீவிரவாதத்தை முன்நிறுத்துகிறது; தீவிரவாத அமைப்பினை ஆதரிக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது. ஆதலால், குற்றத்திற்கு முதன்மைக் காரணமான கவிதையை எழுதி, வாசித்து, வீடியோவாக வெளியிட்ட கவிஞர் டாரின் டட்டூர் ‘பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு (the security of the region) கடும் அச்சுறுத்தலாக’ உள்ளார் என்று வரிந்து கட்டிக்கொண்டு வழக்குப் புனைந்தனர் காவல்துறையும் அரசின் வழக்குரைஞர்களும் இணைந்து.

வழக்கமாக, இதுபோன்ற சமூக ஊடகப்  பதிவுகள் தொடர்பான வழக்குகளில் யாரேனும் கைது செய்யப்பட்டால்,  வழக்கு நடைபெறும் காலத்தில், வழக்கில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்வரை, வீட்டுக்காவல் (House arrest with restrictions on outside movements) அனுமதிக்கப்படும். ஆனால், டாரின் டட்டூருக்கு அவ்வாறு வீட்டுக்காவல் வழங்குவதை அரசுத்தரப்பு / காவல்துறை கடுமையாக எதிர்த்து நின்று இழுத்தடித்ததால், வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்ட அக்11, 2015 முதல், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை  கடுமையான சூழல்கள் நிலவுகிற, அப்பகுதியிலுள்ள  (Jalameh, Sharon and Damoun)  மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றி, மாற்றி அடைக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டது. வீட்டுக்காவல் கேட்டு மனுச்செய்யவும், அம்மனுக்கள் மீது நடைபெறும் விசாரணைகளுக்கு ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் வரும்போது வேறு வேறு சிறைகளிலிருந்து அல்லற்பட்டுவரும் நிலை அவருக்கு ஏற்படுத்தப்பட்டது. 

ஒருவழியாக சனவரி14, 2016ல் அவருக்கு நீதிமன்றத்தால்- வழக்கின் தீர்ப்புவரை - வீட்டுக்காவல் அனுமதிக்கப்பட்டது. அப்போதும் அரசுத்தரப்பு முழுமூச்சுடன் குறுக்கிட்டு, டாரின் டட்டூரை அவரது ஊரில், சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அங்கிருந்து வெகுதொலைவில், தனிமையில், செல்போன், இன்டர்நெட்வசதி ஏதும் இல்லாமல் ஒரு இடத்தில், காவலர் கண்காணிப்புடன், அதையும் மீறி அவர் எங்காவது சென்றால்கூட அதைக்கண்டறிய உதவ அவரது இடது காலில் ஒரு எலெக்ட்ரானிக்கருவி ஒன்றை (An electronic device attached to her ankle supervising her movements) எப்போதும் அகற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்குமாறு காவல்துறையும் அரசு வழக்குரைஞரும் வற்புறுத்தியதால், நாஸரேத் நீதிமன்றம் அந்த நிபந்தனைகளை எல்லாம் விதித்தது.  உடனடியாக வேறு வழியின்றி, மாற்றி மாற்றி வேறு வேறு சிறைகளில் உழலும் அவலத்திலிருந்து தற்காலிக விடுதலையாவது இருக்கட்டும் எனத் தன்மீது விதிக்கப்பட்ட  நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார் டாரின். 

சொந்தஊரிலிருந்து வெகு தொலைவில் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கருகே, கிர்யட் ஓனோ (Kiryat Ono) என்ற புறநகர்ப் பகுதியொன்றில் இன்டர்நெட் வசதியற்ற ஒரு சிறிய குடியிருப்பைத் தனது தமையன் வாடகைக்கு ஏற்பாடு செய்துதர முடிந்ததால் அங்கு மாற்றப்பட்டார் டாரின். வீட்டின் வெளியில் எப்பொழுதும் தப்பாத காவல் கண்காணிப்பு உறுதி; அவரது இடது கணுக்காலில் அகற்ற முடியாதவாறு பொருத்தப்பட்ட வேவுபார்க்கும் எலெக்ட்ரானிக் கருவி. சொந்த ஊரை, சொந்த வீட்டை, பழகிய இடங்களை விட்டு  நாடுகடத்தப்பட்டது போன்ற அந்நியமானதொரு தொலைவில்- வசதிகளற்ற ஒரு சிறிய வீட்டைவிட்டு எங்கும் வெளியில் செல்ல முடியாத கண்காணிப்பு; செல்போன், இணைய வழியாகக்கூட வெளியுலகத் தொடர்பேதுங்கொள்ள வழியுமற்ற சூழல் – அதற்குத் தனிமைச் சிறைவாசமே இருந்திருக்கலாம் என்ற நிலை.

அந்நிலையை மாற்ற விரும்பித்  தனது சொந்த ஊரில் வீட்டுச் சிறையிருக்க அனுமதி வேண்டிப் பலமுறை நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதும் ஒவ்வொரு முறையும் அரசுத்தரப்பின் வலுவான எதிர்ப்பால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஆறுமாதங்களான பின்னர் வீட்டுச்சிறைவாசத்தைச் சொந்த ஊருக்கு டாரின் மாற்றித்தொடர   நீதிமன்றம் கனிந்தது. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்- ஏறத்தாழ ஏழுமாதங்களுக்குப் பிறகு- 2016, ஏப்ரல் 13ல்தான் நாஸரேத் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் நாள் கேட்பு (hearing)- ‘வாய்தா- தொடங்கியது. இதற்கிடையில் அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் எனப் பென் (PEN International), ஆம்னெஸ்டி (Amnesty International) போன்ற பல அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் இயக்கங்களைத் தொடங்கின. பல சமூக ஊடகங்களிலும் டாரீனை விடுதலைசெய்யக் கோரிக்கைகள் இடைவிடாது இடம்பெற்றன.  

சேர்த்துப் பார்க்கும்போது, 2015 முதல் டாரின் ட்ட்டூர் காவல் பிடியில்தான் இருக்கிறார். பலமுறை அவருக்குப் பிணை (bail) மறுக்கப்பட்டது.சனவரி 2016 முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவரது கவிதையோ வேறு எந்தப் படைப்போ வெளியிடப்படக் கூடாதெனும் தடை அவர் மீது விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு செல்போன், இணையத் தொடர்புகளும் மறுக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் கழிந்து, மே 3, 2018ல், டாரின் டட்டூர் மீது சுமத்தப்பட்ட  கவிதையின் மூலம் வன்முறையைத் தூண்டுதல்  (incitement to violence), தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்தல் (‘supporting a terrorist organization’) ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ( நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விவரங்கள் தனியே விரிவாக எழுதத் தக்கவை.)

நீதிமன்றத்தால் 2018ல் இறுதித் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே, ஒரு கவிதைக்காகவும், இரு முகநூல் பதிவுகளுக்காகவும் 2015 அக்டோபர் முதல் சிறைவாசம், வீட்டுச் சிறைவாசம் என்பதெல்லாம் சேர்த்துத் தொடர்ந்து சிறைக்காவலில்தான் அவர் இருந்திருக்கிறார். மேல் முறையீட்டுக்குப்பின் செப்டம்பர் 28, 2018ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். 
தான் சிறைப்பட்டிருந்த வலிகளை விடக் கூடுதலான  வலியும் தண்டனையும் அதிரடிக் கைது நடந்த அக்டோபர் 2015 முதல் இறுதியாக விடுதலையான செப்டம்பர் 2018 வரை, நீதிமன்ற நிபந்தனையால், அவரது கவிதை எதுவும் வெளியிடப்படாமல், வெளியுலகம் காணாமல் தன்னோடு சேர்ந்து சிறையிருக்க நேர்ந்ததுதான் என்கிறார் இப்பெண் கவிஞர், ஒரு பேட்டியில். 

ஆனாலும் அவர் மகிழ்ந்து புன்னகைத்திருக்க இனியதொரு காரணம் நிறைந்து நிற்கிறது. 2015 முதல் 2018 வரை அவரைச் சிறைப்படுத்திய அதிகாரம், அவர் எந்தக் கவிதைக்காகச் சிறைப்படுத்தப்பட்டாரோ அந்தக் கவிதையை - (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’)   எதுவும் செய்ய முடியவில்லை. பதிவிடப்பட்ட நாள் முதல் அக்கவிதை இணையத்தில் வாகாக இருப்புக்கொண்டுள்ளது. லட்சக்கணக்கில் வாசகர்களால் அக்கவிதை காணப்பட்டு, வாசிக்கப்பட்டு, இணையவளத் தாராளத்தால் பதிவிறக்கமும் செய்யப்பட்டுப் பத்திரமாகியுள்ளது.
எழுத்தின் வலிமையை எவர் இழுத்துக் குறைக்க முடியும்?

ஒரு கவிதைக்காக டாரின் டட்டூர் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் ஒருநூறு கவிதைகளுக்குமேல் சிறைப்பட்டிருந்த காலத்தில் எழுதிக் கையிற் கொண்டு வெளிவந்துள்ளார் அவர்! அவர் கவிதைகள் வெளியிடப்படத் தானே சிறைக்காலத்தில் தடையிருந்தது?

சிறைவிடுதலை பெற்ற பின், சிறையிலும், வெளிவந்த பின்னரும் எழுதிய கவிதைகள் பல தொகுப்புகளாக இதுவரை வந்துள்ளன. அவற்றுள் சில (The Last Invasion, Nazareth: El Wattan Books, 2010; My Threatening Poem, Arabic, Tunis: Dyar Publishing and Distribution House, 2018; Threatening Poem – Memoir of a Poet in Occupation Prisons, English Version. Scotland: Drunk Muse Press, 2020; I Sing From the Window of Exile – English and Arabic. Scotland: Drunk Muse Press, 2023)

இன்னும் வரும்.

எவரடைக்க முடியும் கவிதையூற்றை?


*
இதோ Dareen Tatourஐ சிறைப்படுத்திய

அந்தக் கவிதை!


Resist My People,Resist.
-Dareen Tatour
-----------------
Resist, my people, resist them.
In Jerusalem, I dressed my wounds and breathed my sorrows
And carried the soul in my palm
For an Arab Palestine.
I will not succumb to the “peaceful solution,”
Never lower my flags
Until I evict them from my land.
I cast them aside for a coming time.

Resist, my people, resist them.
Resist the settler’s robbery
And follow the caravan of martyrs.
Shred the disgraceful constitution
Which imposed degradation and humiliation
And deterred us from restoring justice.
They burned blameless children;
As for Hadil, they sniped her in public,
Killed her in broad daylight.

Resist, my people, resist them.
Resist the colonialist’s onslaught.
Pay no mind to his agents among us
Who chain us with the peaceful illusion.
Do not fear doubtful tongues;
The truth in your heart is stronger,
As long as you resist in a land
That has lived through raids and victory.

So Ali called from his grave:
Resist, my rebellious people.
Write me as prose on the agarwood;
My remains have you as a response.
Resist, my people, resist them.
Resist, my people, resist them.

*


Tuesday, May 21, 2024

Friday, September 23, 2022

 

 

 

அறியாத பாரதி

இராஜ முத்திருளாண்டி

 

 

தமிழகத்தின் தென்பரப்பிலுள்ள ஒரு சிற்றூரான எட்டையபுரத்திலே  பிறந்து, ஆக்க நெருப்பாய்க் கிளம்பி, ‘மகாகவி’, ‘தேசியக் கவி’, ’தமிழ் நவயுகத்தின் வெள்ளி முளைப்பு’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூலபுருஷர்’, ’தமிழிலக்கியத் துறைகள் தோறும் புதுமைகள் வடித்த இலக்கியச் சிற்பி’ என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவனாக விகசித்து நிற்கும் பாரதி மறைந்து (1921) நாறாண்டுகள் கழிந்துவிட்டன. “பார் மீது நான் சாகாதிருப்பேன் (பாரதி- அறுபத்தாறு -6) எனப் பெருமலையன்ன அசையா நம்பிக்கையுடன் தன் வரலாறு பாடியஒரே கவிஞன் பாரதி. தான் மறைவடைய ஒரு மாதத்திற்கு முன்புகூட (ஆகஸ்ட்1921) , ஈரோடு கருங்கல்பாளையத்தில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்றே இறுதியாகவும் உறுதிப் பிரகடனம் செய்து விட்டு வந்தான். ஆனால், மெல்ல வந்து- 1921 செப்டம்பர் 11 நள்ளிரவுகடந்து- மரணம் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டது. இருப்பினும் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற பாவேந்தரின் நம்பிக்கை முழக்கத்திற்கேற்ப, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் புகழுருவாகத் தமிழ்கூறும் உலகெலாம் வளர்ந்துகொண்டே இருக்கும் விந்தையின் பெயர்தான் சி.சுப்பிரமணிய பாரதி. இன்றவன் நினைவு நாள்.

 

அவன் வாழ்ந்த குறுகிய காலத்தில் (39ஆண்டுகள்) பாரதியைச் சரியாகவும், முழுமையாகவும் தமிழுலகில் யாரும் அறிந்து, புரிந்து, ஆதரித்துப் போற்றவில்லை என்பது  கசப்பான  உண்மை. அவன் வாழுங்காலத்தில் அவனைத் தக்கவாறு அறிந்து போற்றி ஆதரவளிக்கத் தவறி, “அலஷியம் செய்த தமிழுலகம் திடீரென்று அவர் புகழில் மோஹமுற்று” (நாவலர் சோமசுந்தர பாரதி,1954) தொடர்வது விந்தைதான். சரி, பாரதி மறைவிற்குப் பின்னாவது அவனை முழுதாக அறிந்து தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்பதே உண்மையான பதில்.

 

பாரதியின் மறைவிற்குப் பின் அவனது கவிதாவாழ்வின் ‘காரியம் யாவிலும்’ உடன் நின்றுழன்ற பாரதியின் மனைவி செல்லம்மாள் வழங்கிய ‘ பாரதி சரித்திரம்’ எனும் மெல்லிய நூலுக்குச் சுத்தானந்த பாரதி எழுதியுள்ள முன்னுரையில், “அங்குமிங்கும் சில குறிப்புகளைக் கேட்டே நமக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர் வரலாற்றை எழுதுகிறவர் எழுதியளித்தால் தமிழ் மரபிற்கே பெரும் பயனாகும்  என்று உண்மை சொல்லியிருக்கிறார். “ பாரதியினுடைய ஜீவியத்தின் ஆதாரத்தைக் கொண்டு ஒரே நோக்கில் பூர்த்தியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு மதிப்புரை இன்னும் வெளிவரவில்லை.” என்று குறைப்பட்டார் கு.ப. இராஜகோபாலன் (கண்ணன் என் கவி, 1937). அன்று சுத்தானந்த பாரதி, கு.ப.ரா உள்ளிட்டோர் சொல்லிச் சென்றதே இன்றும் நிலை. ஆம், இதுவரை நமக்குக் கிடைத்துள்ள பாரதியைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், பாரதி விமர்சனம், பாரதி ஆய்வுகள், பாரதி படைப்புகளின் ஆய்வுத் தொகுப்புகள் எனப் பலவும் பூர்த்தியற்ற, “அங்கொன்றும் இங்கொன்றுமான ” தகவல்களே தந்து நம்மை இன்றுவரை பாரதியை முழுமையாக அறியாத நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கின்றன.

 

பாரதியின் மறைவுக்குப்பின், செல்லம்மாள் பாரதியைத் தொடர்ந்து பாரதியின் இரு மகள்கள் தங்கம்மாள் (1947) , சகுந்தலா ஆகியோர் தம் தந்தையார் குறித்து ஆர்வமுடன் பதிப்பிக்கச் செய்த சிறு வெளியீடுகள் முழுமையற்றவையாகவும் “அங்குமிங்குமான சில குறிப்புகளைத் தருவதாக இருந்தனவேயொழிய, விவரமான  வரலாறு எனும் வகையில் உறுதியான ஆண்டுக் குறிப்புகளோ, ஆவண ஆதரவுகளோ இல்லாமல்தான் வந்தன. அவ்வெளியீடுகள் - ‘உடன் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்கள தனிப்பட்ட தத்தமது நினைவுகளைக் கிளறி வடித்த, உணர்வு வெளிப்பாடு’ என்ற வகையில் - வரலாற்று வளமின்றி வற்றிக் கிடக்கின்றன. மேலும், பாரதி வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளைக் காட்டும்போது மூவரது விவரிப்புகளிலும் ஒருமை மாறுபடுவதும் காணமுடிகிறது. பாரதியின் குடும்பத்து மூவரது படைப்புகளும் வெவ்வேறு கால இடைவெளிகளில், பெரும்பாலும் அவரவர்கள் சொல்ல வேறு வேறு நபர்களால் எழுதப்பட்டதாகவே அறிகிறோம். பாரதியின் மிக இளம் வயது  மகள்கள் பாரதியைத் தந்தை என்பதைத் தாண்டி, அம்மகாகவியின் பிற பன்முகப் பரிமானங்களை அவரவர் வயதில் முழுதுணர்ந்திருக்கும் வாய்ப்புகளும் குறைவே. இன்னும் சொல்வதானால், இளையமகள் சகுந்தலாவின் ஏழுவயதுவரை தலைமகள் தங்கம்மாள் (வயது 12), காசியில், செல்லம்மாள் பாரதியின் மூத்த சகோதரி வீட்டில் வளர்ந்து வந்தவர்.சகுந்தலாவே  சொல்கிறார்: “தன் தந்தையாருடன்”கூட வசிக்கும் பாக்கியம் பெருமை” தங்கம்மாளுக்குக் “கிடைத்தது இரண்டு வருஷம் மட்டும்தான்...என் தந்தைக்கும் அவளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு அத்துடன் அற்றுப் போயிற்று ” என்று. (என் தந்தை, பக் 87; 89) இக்காரணங்களாலும் குறைபாடுகள் விளைந்திருக்கலாம்.

 

நெல்லை ஏ,வி.சுப்பிரமணிய ஐயர் (1933), பாரதி சரிதம் தந்த ஆக்கூர் அனந்தாச்சாரி (1936), ஆகியோர் சிறு சிறு ஒளிக்கீற்றுகளாய்ப் பாரதி வரலாறு குறித்த செய்திகளை வழங்க முற்பட்டனர். முதலில் விரிவாக எழுதப்பட்ட பாரதி வரலாறு எனப் பலராலும் மேற்கோள்களாக எடுத்தாண்டுவரும் பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் பல தந்துள்ள வ.ரா., (மகாகவி பாரதியார்,1944) தனது நூலின் முதற் பதிப்பு முன்னுரையிலேயே, நான் இப்பொழுது எழுதியிருக்கும் கதை பாரதியார் சம்பந்தமாக முடிந்த கதையல்ல” என்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். வரலாற்று நூலுக்குத் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு/நாள்/இடம், உடனிருந்தோர் விவரங்கள்  அதிகம் அளிக்காத காரணத்தால், ‘வரலாறு’ எனக் குறிப்பிடத் துணியாமல்’  கதை’ அதிலும் ‘முடிவுறாக்கதை’ எனப் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் பாரதி மறைந்து 23ஆண்டுகள் கழிந்து எழுதித் தந்துள்ள அந்த நூலில், “லட்சணமாகக் கொடுக்க முடியாத ஒன்றை அவலட்சணத்தோடு கூடிய உருவத்தில் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. எனவே அனேக சங்கதிகளை நான் சொல்லாமல் விட்டுவிடவேண்டியதாயிற்று” என வருத்தமும் வெளிப்படுத்தியுள்ளார்.  கூடுதலாக, “இன்னும் சில வருஷங்களுக்குள்ளேனும் பாரதியாரைப் பற்றி விரிவாக எழுத முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தப்புத்தகத்தைச் சுருக்கி விட்டேன்என்றும் கைவிரித்து விடுகிறார்.அவரும் பாரதியாரைப் பற்றி அதற்குப்பின் விரிவாக எழுதவில்லை. வேறு எவரும்கூட முழுமையாகப் பாரதியார் வரலாறு எழுத முன்வரவில்லை.

 

உஸ்மானியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை தலைவராயிருந்த ப.மீ.சுந்தரம் (பாரதியார் வரலாறும் கவிதையும்,1954);  “பாரதியாரின் ஜீவியத்தில் ஒரு பகுதியை இவரெழுதத் தகுதியுடையார்’ எனப் பாரதியின் ‘மனைவியார் கருதியதற்கிணங்க’  பாரதியின் பள்ளித் தோழர் சோமசுந்தர பாரதியும், பாரதிக்கு நண்பரான சர்க்கரைச் செட்டியாரும் இணைந்து வழங்கிய (பாரதியார் சரித்திரம், 1955),  ஆகிய படைப்புகளும் பாரதி வரலாற்றின் ஒரு சில பகுதிகளையே காட்ட முடிந்தது. இவ்வாறு, பாரதி வரலாறு எழுதப் புகுந்த ஆரம்ப காலத்து ஆர்வலர்கள் அனைவருமே எழுத மறந்த, எழுத விடுபட்ட வரலாற்றுத் தகவல்களைக் கண்ட தொ.மு.சி. ரகுநாதன்(பாரதி காலமும் கருத்தும், 1982), கொதித்து “பாரதி வரலாற்றாசிரியர்களும், பாரதி பற்றிய நூலாசிரியர்களும் ...காணத்தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட ,...சொல்லப்போனால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட, பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின்” செய்திகள் பல இருப்பதாக அதிரடி காட்டினார்.

 

நாம் போற்றும் ஒரு மகாகவிஞனை, பன்முகப் படைப்பாளியைத், துறைதோறும் புதுமைகள் செய்த முன்னத்தி ஏராக நிற்கும் பாரதியை முழுமையாக நாமறிந்து கொள்ள முடியாத நிலையே அவனிறந்து நூறாண்டுகள் கடந்தும் தொடரும் இந்த அவலம், நமது அலட்சியம், மெத்தனம் ஆகியவற்றுக்கான வலுத்த சான்றாகும். தொடரும் இத்தகைய அலட்சியம் மெத்தனம் ஆகியவற்றுக்கு மற்றொரு சான்றாகக் கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகம் தனக்களித்த கடமையை மறந்து நிற்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

 

பாரதியின் நூற்றாண்டு விழா (1982) நடைபெறும்போது அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் நூற்றாண்டு விழாக்குழு பாரதியின் முழுமையான ஆதாரங்களுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் கடமை தமிழகப் பல்கலைக் கழகங்களின் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாரதியின் படைப்புகளைச் சீர்படத்தொகுத்துச் செம்பதிப்பாக வெளிக்கொணரும் கடமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டது. அதற்கேற்ப அப்பணியின் ஒரு பகுதியாக பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு 1987இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளிக்கொணரப்பட்டுள்ளது.  பாரதி நூற்றாண்டு விழாமலரைப் பதிப்பிக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - விழாமலர் என்பதால் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படத்தக்க நுண்மாண் நுழைபுலங் காட்டும் வகைக் கட்டுரைகளில்லையாயினும் பல நிலையிலுள்ளோர்  பாரதியைப் பார்த்த, பார்க்கும் பார்வைகளின் தொகுப்பாகக் கருதும் வகைக் கனம் கொண்டதாக, 476 பக்கங்கள் கொண்ட-  மகாகவி பாரதி நூற்றாண்டு விழாமலர் (1982) ஒன்றைக் வெளிக் கொண்டுவந்தது. ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட கடமை இன்றுவரை -ஆளின்றி மிதக்கும் படகுபோல- கரைசேராமலே மிதக்கிறது.

பாரதி நினைவு நூற்றாண்டைச் (2021) சிறப்பான முன்னெடுப்புகளுடன் தொடங்கி மேற்கொண்டுவரும்  தற்போதைய தமிழக அரசு இவ்விசயத்தை மீண்டும் தூசிதட்டிக் கையிலெடுத்துக், கொடுத்த கடமையை நிறைவேற்றச் சென்னைப் பல்கலைக் கழகத்தை முடுக்கி விட்டுத் அவசியப்படும் உதவிகளும் வழங்கவேண்டும். பல்கலைக்  கழகத்தால் அது இயலாதெனத் தெரியவந்தால், தமிழக வரலாறு எழுதப்படக் குழு அமைத்ததுபோல, பாரதி வரலாறு படைத்தளிக்கும் பணிக்கு – தக்கார், தகவுடையார்,பாரதி ஆய்வில் தோய்ந்திருப்பார் தேர்ந்து - ஒரு அறிஞர் குழு அமைத்துக் காலவரையரை சுட்டி அப்பொறுப்பைச் செயல்படுத்த உரியன செய்யலாம்.  இம்முயற்சி பாரதி நினைவு நூற்றாண்டு தொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள முன்னெடுப்புகளை முழுஅர்த்தப்படுத்துவதாக இருக்கும். ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூல மூர்த்தி’ (கு.ப.இரா,1937) பாரதியை-  நாமின்னும் முழுமையாக அறியாத பாரதியை - அறிந்து போற்ற  உதவும்.

 

**

Friday, August 26, 2022

வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்

 இராஜ முத்திருளாண்டி.


வீரமாமுனிவர்  வரலாற்றில் வளர்ந்து நிலவும் குழப்பங்கள்.

இராஜ முத்திருளாண்டி

வருக.

காண்போம்.

https://bit.ly/3e0YyNG


**

வீரமாமுனிவர்  வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்.

 

இராஜ முத்திருளாண்டி*

 

 

 

தமிழ்ப் பரப்பில் வீரமாமுனிவரென நாமறிந்துவரும் (Constanzo Gioseffo Eusebio[1]- தமிழில், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என வழங்கப்படும்) பெஸ்கி அவர்கள், இத்தாலி நாட்டில் , நவம்பர் 8,1680 இல் பிறந்தவர். இளமையிலேயே இயேசு சபை ஊழியம் செய்யப் பெரிதும் விரும்பி, ரோம் நகரில் உரிய போதனையும் முறையான பயிற்சியும் பெற்ற பின்னர் இடர்மிகு கடற் பயணம் மேற்கொண்டு இந்தியா (கோவா) வந்து சேர்ந்து தமிழகம்  அடைந்தவர்.  மதுரை திருச்சபையில்  ஒன்றி, ‘தைரியநாத சாமி’ யாக  , இயேசு சபை ஊழியம் தொடங்கிக் கால் கொண்டு நின்று -  சமய ஊழியத்தோடு அளப்பரிய தமிழ்த்தொண்டும் ஆற்றி - இன்றளவும் நினைந்து போற்றப்படுகிறவர். இருப்பினும், அவரது வரலாற்றுத் தகவல்களில் இன்றுவரை பல குழப்பங்கள் வளர்ந்து தொடர்கின்றன.

 

இத்தாலியில் பிறந்த பெஸ்கி அவர்களின் பிறந்த ஆண்டு (1680) விவரங்குறித்து மாறுபாடான செய்திகள் இதுவரை இல்லை. ஆனால், தான் விரும்பிய பணி செய்யப் பெஸ்கி எப்போது இந்தியா வந்தடைந்தார்? என்பதிலிருந்து ஆரம்பித்தால் அவர் என்று?, எங்கு இறுதியடைந்தார்?; எங்கு அவரது கல்லறை அமைந்துள்ளது?;  என்பன தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள் மாறுபட்ட விவரங்களை வழங்கிக் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையில் இனி விரிவாக விவாதிக்குமுன் எடுத்துக்காட்டுகளாக:- வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டு என 1700 , 1707, 1710, 1711 என்றும்; அவர் இறுதியடைந்த ஆண்டு 1740, 1742, 1746, 1747 எனவும்; அவர் தமிழ்நாட்டில் இறுதியடைந்தார், இல்லை கேரளாவில் இயற்கை எய்தினார் என மாறுபட்டும்; அவர் மறைவடைந்த இடம் காயல்பட்டிணத்துக்கருகே ; அம்பலக்காடு; மணப்பார் (மணப்பாடு) என்ற இடங்கள் சுட்டியும்; அவருடைய கல்லறை இருக்குமிடங்களாக அம்பலக்காடு, திருச்சி, மணப்பாறைக்கருகே மலையடிப்பட்டி என்ற கிராமக் கிறித்தவ ஆலயம் எனவும் உறுதிப்படுத்தாத் தகவல்கள் உலவிவருகின்றன நாளதுவரை

 

மேலும் அவர் தமிழகத்தில் பணியாற்றியது; அவரது சபை ஊழிய காலத்தில் நிகழ்ந்தவையாகக் குறிப்பிடப்படும் செய்திகள்; திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிப்புடன் அவர் நட்புறவாக இருந்ததுடன், அவரது திவானாக இருந்தது குறித்தும்; அவரது வாழ்க்கை - உணவுப்பழக்கம், உடை, சமயப்பிரச்சாரப் பயண நடைமுறைகள்; அவர் படைத்தளித்ததாக நாம் போற்றிவரும்  நூல்கள் முதலியன குறித்த பல முக்கியமான வாழ்க்கை வரலாற்று விசயங்களிலும் ஒருமையில்லா நிலை அடர்ந்திருக்கிறது.[2] வீரமாமுனிவரைச் சமயம் கடந்து பலரும் போற்றுவதற்கான முதன்மைக் காரணமே அவர் தமிழுக்குப் படைத்தளித்துள்ளதாகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் - “ஆறறுநூற்று மூவைம்பூக்களால்” கோர்க்கப்பட்டிருக்கும் வாடாத் தமிழ் மாலையான தேம்பாவணி உள்ளிட்ட-  25 இலக்கிய, இலக்கண நூல்களாகும்.

 

இந்த முதன்மை அடிப்படையையே இடித்துத் தகர்க்கும் கருத்தில்,  தமிழிலக்கிய வரலாற்றை நூற்றாண்டுகளாகப் பகுத்து விரிவாகவும் முன்னோடியாகவும் எழுதி வழங்கியுள்ள மு.அருணாசலம் (1974) தனது ஆங்கில நூலில் ‘வீரமாமுனிவர் பெயரில் அறியப்படும், தேம்பாவணி,சதுரகராதி, தொன்னூல் விளக்கம்,பரிபூரண குருகதை உள்ளிட்ட  அனைத்து நூல்களுமே உண்மையில் சுப்ரதீபர் எழுதியவை’[3] என  அதிரடியாக அறியத்தந்தார். இதே கருத்து,முன்னொரு சமயத்தில்  கசடதபற (1971) இதழிலும் முன்வைக்கப்பட்டிருந்தது.[4] வலுவான, உறுதியான ஆதாரங்களை  அடிப்படையாகக்கொண்டு வீரமாமுனிவர் படைப்புகள் தொடர்பான கருத்துகள்  எழுப்பப் படாததால், நிலைத்து நின்று வீரமாமுனிவர் குறித்த ஆய்வுப் பரப்பில் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படாமல் சிதிலமடைந்துள்ளன.

 

நடுநிலை நின்று, தேடித் தீர ஆராய்ந்து, ஆவணங்கள், சான்றுகள் மூலம்  வீரமாமுனிவர் குறித்த வரலாற்றுக் குழப்பங்களுக்கான விடைகள் தேடாநிலையே இன்றும் தொடர்கிறது. இதனால் பலரும் பலவாறாகத் தமக்குத் தோன்றியவகையில் – ஏற்கத்தக்க ஆதாரங்களின் துணையின்றியே - நூல்களிலும் கட்டுரைகளிலும், தகவல் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவ்விசயத்தில் காய்தல் உவத்தலற்ற நேர்மையோடு குறிப்பிட உரியதென்னவென்றால், வீரமாமுனிவர் குறித்துத் தற்போதுவரை நமக்குக் கிடைக்கும் செய்திகள் யாவும், மிகப் பெரும்பாலும் அவர் சார்ந்திருந்த கத்தோலிக்கக் கிறித்தவ மத சபைகள் / நிறுவனங்களது ஆவணங்கள், கடிதங்கள்,பிற பதிவுகள், சான்றுகள் முதலியவற்றுடன் ; இந்தியாவிலும் அயல்நாட்டிலுமுள்ள கிறித்தவ ஆய்வாளர்களது நூல்கள், கட்டுரைகள் முதலியவற்றின் வழியாகவே கிடைக்கின்றன. இருந்தும், வீரமாமுனிவரது வாழ்க்கை, பணி விவரங்களில் உறுதியும் நேரொருமையுமின்றி மாறுபட்ட தகவல்கள் பரவிக்கிடக்கின்றன என்பது நெருடலாக உள்ளது.

 

வீரமாமுனிவர் தனது மதப்பிரிவான கத்தோலிக்கக் கிறித்துவப் பரவலுக்குப் பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு  மும்முரமாகப் பணியாற்றியதால், புராட்டெஸ்டண்ட் கிறித்தவப் பிரிவினரும், அவர்களைவிட அதிகக் காட்டமாக லுத்தரன் பிரிவினரும் பெஸ்கி அவர்கள் குறித்து மாறுபட்ட, வெறுப்புமிழும் தகவல்களையும் [5] பதிவுகளில் நிறுத்தியுள்ளனர். இவை தவிர்த்துப் பிற சமயத்தாரால் படைக்கப்பட்ட வீரமாமுனிவர் குறித்த நூல்கள், ஆய்வுகள் மிகச்சிலவே கிடைக்கின்றன. 

 

அயல்மண்ணிலிருந்து வந்து, தாம் மேற்கொள்ளும் சமயப் பரவல் செய் பணிக்கு இம்மண்ணின் மக்கள் பேசும் மொழிவாயிலாக அணுகுவதே உசிதமானது என்பதைத் தெளிவுற உணர்ந்தார் தைரியநாதர். ஆர்வமுடன் முயன்று, தமிழ் கற்றுத் தமிழுக்குப் பலவகைப்பட்ட அரிய, 25 நூல்கள்[6]  வழங்கித் தமிழ்வளத்தைத் தனக்கியன்றவரை பெருகச் செய்துள்ளவரான வீரமாமுனிவரது வாழ்க்கை தொடர்பான ஆதாரம் நிறை செய்திகளும் ஏற்கத்தக்க உண்மையான ஆவணங்களும் உரியவாறு பாதுகாத்து வைக்கப்படவில்லை. பிற்காலத்தில், “தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை” என்று முழங்கிய பாவேந்தரின் உறுதிப்பாட்டை அவர் சார்ந்த மதத்தவர்களும், அவர்களைப் போலவே தமிழுலகும் முற்றாகச் செயல்படுத்தவில்லையே என்பது பெரும் ஆதங்கமாக நிற்கிறது.

 

மாறுபட்டுப் பரவிக் கிடக்கும் வீரமாமுனிவர் வரலாறு குறித்த விவரங்களைக் காண்போம். தமிழில் முதன் முதலில் (1822 & மறுபதிப்பு 1836) அச்சேறிய மிகச் சுருக்கமான வீரமாமுனிவர் சரித்திர வரலாறு” எழுதிய அ.முத்துச்சாமிப் பிள்ளை, வீரமாமுனிவர் வாழ்ந்த காலத்தை 1680-1742 என்று குறிப்பிட்டுள்ளார்.[7] ஆனால், அவரே தனது நூலின் முற்பகுதியில் வைத்துள்ள வீரமாமுனிவர் (Father Beschi) படத்தின் கீழ் ( Father Beschi’s life by Rev. L. Bessel, S.J என்று குறிப்பிட்டுள்ள ஆங்கில நூலிலிருந்து[8]) எடுத்தாண்டுள்ளதாகக் காட்டியுள்ள சிறு குறிப்பில் —

... ... பற்பல நூல்கள் இயற்றி 4-2-1747ல் கடவுள் திருவடி நீழலில் அம்பலக்காட்டில் – இன்புற வதிந்த பெரியார்

எனத் தமிழ்ப்படுத்திக்  குறிப்பிடப்பட்டுள்ளது. முத்துச்சாமி பிள்ளையோ, வீரமாமுனிவர் மறைந்தது ‘மணற்பாடு’ என்ற ஊரென்கிறார்; மறைந்த ஆண்டு 1742 என்கிறார். ஆனால் அவரே - மறுப்புக் குறிப்பு எதுவும் தனது நூலில் வைக்காமல்-  வீரமாமுனிவர் படத்தின் கீழ் எடுத்தாண்டுள்ள- ஆங்கிலத்தில் முதன் முதலில் எழுதப்பட்ட பெஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலான- பெஸ்ஸியின் (Fr. L. Besse, 1918) நூல் செய்தியோ, வீரமாமுனிவர் மறைந்தது அம்பலக்காடு என்னும் ஊர்; மறைந்த ஆண்டு 1747 என்கிறது.   வீரமாமுனிவர் குறித்த வரலாற்றுப் பதிவுகளின் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த இவ்விரண்டு முதன்மை ஆதாரங்களையும் நோக்குமிடத்தில் வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாற்றுக் குழப்பங்கள் இங்கிருந்தே தொடங்குகின்றன எனலாம். வீரமாமுனிவர் குறித்த முதல் தமிழ் நூலான முத்துசாமிப் பிள்ளையின் நூலில் பல தவறான செய்திகள் நிறைந்திருப்பதாகப் பின்னர் (1996 ல்) வெளிவந்த  ‘வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்’[9] என்னும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையும் கருத்தில் நிறுத்தி மேற்செல்வோம்.

வீரமாமுனிவர் குறித்துக் கிறித்து மத நிறுவனங்கள் வழங்கும்  தகவல்களும் மாறுபட்டு நிற்கின்றன. ஹெரிட்டேஜ் வேம்பாறு (Heritage Vembaru)[10] எனும் தகவலமைப்பு, பெஸ்கி ‘இந்தியாவில் தனது முப்பதாண்டுப் பணிக்காலத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1746ல் இறந்தார்’ என்ற செய்தி வழங்குகிறது. ஆனால், ‘கத்தோலிக்க சபை வரலாறு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தரும் ஏற்பாடாகத்’ [11] தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் கத்தோலிக்க  என்சைக்ளோபீடியா (Catholic Encyclopedia) பெஸ்கியின் வாழ்வுக் காலத்தை 1680-1746 எனக் குறிப்பிட்டிருந்தாலும், ‘அவர் 1744 ல் மணப்பார் மிஷன் ரெக்டராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி, மணப்பாரில் 1746ல் இறந்ததாக’[12] தகவல் தருகிறது. தைரியநாதராகப் பணி தொடங்கிய அவரது மதுரை சபை (பின்னாட்களில் டயோசிஸ் Madurai Dioses அந்தஸ்தடைந்தது) அவருடைய வாழ்க்கைக் குறிப்பை 1680-1747 என வழங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள பூண்டி மாதா ஆலயம், பெஸ்கி இறைப்பணி செய்த பல ஆலயங்களில், பிரபலமாக விளங்கும் ஒரு ஆலயமாகும். இது குறித்த தகவலமைப்பு[13] அதிகாரப்பூர்வமாக வழங்கும் தகவல் குறிப்பு ‘இந்த ஆலயத்தை நிர்மானித்த கானஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 1680-1742என்பதாக உள்ளதையும் குறிப்பிடவேண்டியுள்ளது. அண்மையில், ‘தமிழ்க் கத்தோலிசிசம்’ குறித்துச் சிகாகோ பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்திற்கான தனது ஆய்வுக்காக இந்தியாவில் பெஸ்கி அவர்கள் தொடர்புடைய பல இடங்களிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்த ஆய்வாளர் (Marghereta Trento, 2022) இயேசுசபை இரங்கல் குறிப்புகளை ( Jesuit obituary records) நுணுக்கமாக ஆராய்ந்து, அக்குறிப்புகளின்படி,  ‘பெஸ்கி, எந்தச் சூழலில் இறந்தாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாவிட்டாலும்,   பிப்ரவரி 4, 1747ல் அம்பலக்காட்டில் மறைவடைந்ததாக முடிவுகொள்ளலாம்’ என ஆய்வறிக்கை அளித்துள்ளார்.[14]

 

வீரமாமுனிவரது இந்திய வருகையிலிருந்தே பார்த்தோமானால், அவரது இந்தியா வருகை ‘1710 பிற்பால்’  என ஆங்கில வரலாற்று நூலாசிரியர் பெஸ்ஸி (Fr. L. Besse, 1818) குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு எண்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே ‘கிறிஸ்தவமும் தமிழும்’ என்ற தலைப்பில் இத்துறையில் முதல் நூலினை ஆக்கம் செய்த தமிழாய்வு அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி,[15] பெஸ்கி இந்தியாவுக்கு 1700ல் வந்தடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, வீரமாமுனிவர் மறைந்த ஆண்டு 1742 என்றும், மறைவடைந்த ஊர் மணப்பாடு என்றும்[16] நூற்பதிவு செய்து வைத்துள்ளார். வீரமாமுனிவர் லிஸ்பனிலிருந்து 1709ஆம் ஆண்டு கப்பல் வழியாகப் புறப்பட்டு இறுதியாக 1710ல் கோவா வந்தடைந்தார்[17] என்று ஒரு ஆய்வுத் தகவல் உள்ளது. பெஸ்கி 1707 லிலேயே இந்தியாவந்தடைந்து விட்டதாகவும், அவர் 1742ல் மறைவடைந்ததாக இன்னொரு தகவல் ஒரு பன்னாட்டிதழில்[18]  வெளியான கட்டுரையில் காணக்கிடைக்கிறது. வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டுக் குழப்பங்களோடு அவரது மறைவு குறித்தும் தெளிவற்ற தகவல்களே பதிவுகளாகி வருகின்றன என்பதை முன்னருங் கண்டோம்.  சுருக்கமாக, அவரது மறைவு 1742[19] என்றும்; 1746[20] எனவும்; ‘இல்லை’, அவர் மறைந்த ஆண்டு 1747[21] என்றும் வீரமாமுனிவர் ஆய்வாளர்கள் மாறுபட்ட நிலைப்பாடுகள் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிகிறோம்.

இக்கட்டுரையில் முன்னர்க் குறிப்பிட்டுள்ள முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதாக இராஜமாணிக்கம்(1998)  நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[22] மேலும் அதே நூலில், ‘’1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச் சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணி புரிந்த பின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர் துறந்தார்’’[23]எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் இவர் மணப்பாட்டில் உயிர் துறந்தார் என்ற குறிப்பினைச் சற்றே திரித்து, திருச்சிக்கருகிலுள்ள மணப்பாறையில் அவர் உயிர் துறந்தார் என்றும் கூறுவதும் காணப்படுகிறது. மணப்பாறைக்கு அருகிலுள்ள மலையடிப்பட்டி என்ற கிராமத்துக் கிறித்துவ ஆலயத்துக்கருகில் வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்டடுள்ளதாக ஒரு இடமும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.[24] மற்றொரு இடத்தில் கிடைக்கும் தகவலின்படி, அவரது உடலடக்கம் செய்யப்பட்ட இடம் கேரளவில் (கொச்சின் சமஸ்தானத்தைச் சேர்ந்த) சம்பலூர் (Sampaloor) என அறியக் கிடைக்கிறது.[25]   திருத்தங்களுக்குள்ளாகும் வாய்ப்புகளுள்ள விக்கிபீடியா தகவலின்படி  அவர் இறுதி ஓய்வடைந்திருக்கும் இடம் கேரளாவிலுள்ள சம்பலூர் அல்லது தமிழ்நாட்டிலுள்ள மணப்பாடு [26]எனச் சமவாய்ப்புக் காட்டுகிறது.

வீரமாமுனிவர் குறித்து இவ்வாறான மாறுபட்ட கருத்துகள் நிலவ ஒரு காரணம் அப்போதைய கிறித்து மதச்சபையினரிடையே நிலவிய விரிவான பிளவுகளும், அசிரத்தையும் ஆகும், வீரமாமுனிவரது நூல்களைப் ஓரளவு பாதுகாத்த அளவிற்குக்கூட அவரது வாழ்க்கை விவரங்கள், சமயப்பணி, பயணித்த ஊர்கள், அவர் தமிழ்நாட்டில் தொடர்பு கொண்டிருந்தவர்கள் (குறிப்பாக சந்தா சாகிப் தொடர்பு, அவரது திவானாகப் பணியாற்றியது);  அவரது செயற்பாடுகளின் காலவிவரங்கள் முதலியற்றைக் கவனம் செலுத்தி ஆவணப் படுத்தாமை பெருங்குறை.முத்துசாமிப் பிள்ளை (தமிழ் 1822,1836, ஆங்கிலம் 1840) நூலில்  வீரமாமுனிவர் – சந்தா சாகிப் நல்லுறவும், சந்தா சாகிப்பின் திவானாக வீரமாமுனிவர் பணியாற்றியதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அச்செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதும் நிகழ்ந்துள்ளது.[27]

 

இரண்டாவது காரணம் பலரும் தத்தமக்கு எட்டிய நூல்கள் / செய்திகளிலிருந்து – உண்மை ஆராயும் முயற்சிகள் ஒரு சிறிதும் மேற்கொளாது – தயங்காமல் நகலெடுத்து சர்வசகஜமாகப் பரிமாறிவருதலாகும்.[28] மூன்றாவது காரணமாக உணரப்பட்டு, அதிகம் பேசப்படாமலிருப்பது வீரமாமுனிவர் மிகச் சிறப்பான பணிகளைத் தமது சமயப் பரவலுக்கும் தமிழின் வளம் பெருக்கவும் நிறைவுற ஆற்றியும் கடைசிவரை அவர் ஒரு பாஸ்டராகவே நிறுத்திவைக்கப்பட்டது ஏன் என்னும் வினாவிற்கான விடையில் இருக்கிறது.[29]

 

கிறித்தவ மதத்திலேயே போட்டிப் பிரிவினர் ( குறிப்பாக லூத்தரன் பிரிவினர்)  தூற்றினாலும், வீரமாமுனிவரது செயலாற்றலும் தமிழாற்றலும் மறைக்கப்படாமல் மதிக்கப்பட்டன[30]. ஆனால், அவரது கத்தோலிக்கத் திருச்சபை அவரை எந்த உயர் பொறுப்பிலும் அமர்த்தவேயில்லை; திருச்சபையில் முக்கிய நிர்வாகப் பொறுப்பு ஏதும் அவருக்கு வழங்கப்படவேயில்லை; அவரது திருச்சபை தொடர்பான கடிதங்களும் இயேசு சபை ஆவணக்காப்பகங்களில்(Jesuit Archives) பாதுகாத்து ஆவணப்படுத்தப்படவில்லை[31]; அவர் ஊழியஞ்செய்த கொங்கனாங்குப்பம், ஏலாக்குறிச்சி,பூண்டி, கூட்டங்குளி ஆகிய ஆலய மக்களிடையே அவர் அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளதாக பரவலான செவிவழிச் செய்திகள் வழங்கப்பட்டுவரும் நிலையிலும் வாடிகன் தலைமை அவரைப் புனிதராக அறிவிக்கவோ, வேறுவகைக் கௌரவம் அளிக்கவோ ( Beautification/Canonization) கருதவில்லை இதுவரை. பற்பல சிறப்புகளைத் தமது பணிவழி பேசவைத்துள்ள வீரமாமுனிவருக்குத் தமிழக மக்கள் சார்பில் அரசு, சென்னை மெரீனாவில் சிலைநிறுவிப்(1968) போற்றி வருகிறது. அவரது திருச்சபை, வீரமாமுனிவருக்கு உரிய சிறப்பு வழங்கக் காலம் கனியுமென நம்புவோம்.

 

**

 

 

 

 

* profrajamuthu@gmail.com

[1] Name found in the baptismal certificate records. [See:- Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, The great heroic sage, 2018.It is said by the Authors that he later used to sign as Constantius Joseph Beschi ]

[2] For more and Christian accounts See: Anand Amaldoss, S.J., Gift of the Virgin Conch-Shell, வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகம், Golden Net, Computers, Trichy, 2018 P.2 &  Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, Constanta Gioseffo Beschi  ( 1680-1747), The great Heroic Sage,2018 [‘ The existing literature on Beschi contains numerous errors and variations in dates, names and other information..’)

[3] Mu Arunachalam, An Introduction to Tamil Literature, Gandhi Vidyalayam, Thiruchitrambalam, 1974. (P 274-279)

[4] நா.கிருஷ்ணமூர்த்தி, கசடதபற, அக்கம் பக்கம், 5 பிப்ருவரி, 1971 (பக்கம் 16)

[5] See, for a sample:- Julius Richter, History of Missions in India, 1908, Page 111-113

[6] அவர் பெயரிலுள்ளதாகக் காட்டப்பட்டுவரும் சுமார் 15 மருத்துவ நூல்கள் தவிர்த்து.

[7]அ.முத்துச்சாமிப் பிள்ளை , வீரமாமுனிவர் சரித்திரமும் பாடற்றொகுதிகள் முதலியனவும். (மறு பதிப்பு 1836,).  “ காயல் பட்டிணத்திற்கடுத்த மணற்பாடென்னு மூருக்குப் போயங்குள்ள சேசுசபை மடத்தி லவரந்தியமட்டு மிருந்த விரண்டு வருஷகாலமு முதிர்ந்தவயதினராயினும் உயர்ந்த மனமுயற்சியோ டங்கே வேதோபதேசம் பண்ணிக் கொண்டும் , தாம் பாடிய பெருங் காப்பிய முதலானவற்றைப் பிரசங்கித்துக் கொண்டுமிருந்தார். ஈந்தியாவில் வந்தநேகம் பிரசைகள் பரலோக இன்ப வெள்ளத்திற் றுளைந்து விளையாடும்படி ஆற்றற்கரிய முயற்சித்துன்ப வெள்ளத்தி லுலைந்து  வருந்திய சீவகாருண்ணியராகிய வீரமாமுனிவரால் அப்பரலோகத்தை அலங்கரிக்க 1742*ம் ஆண்டு  ஆண்டவற்குத் திருவுளமாயிற்று.” (*மூலத்தில் 1742க்குத் தமிழ் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.) (பக்.19)

[8] Rev.L. Besse, Father Beschi of the Society of Jesus: His times  and his writings, Trichinopoly, 1918

[9] எஸ். இராஜமாணிக்கம், எஸ்.ஜே., வீரமாமுனிவர் தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 66-67.)

[11] The Catholic Encyclopedia: An International Work of Reference on the Constitution, Doctrine, Discipline, and History of the Catholic Church (also referred to as the Old Catholic Encyclopedia and the Original Catholic Encyclopedia.

[12]https://www.catholic.com/encyclopedia/costanzo-giuseppe-beschi

[14] Marghereta Trento, Writing Tamil Catholicism, Ph.D. Thesis, University of Chicago,2019 “We have no account of the specific circumstances of Beschi’s death, but Jesuit  obituary records show that he died in Ambalakkadu on  February 4,1747-See ARSI H.S53, (Defuncti 1741-1750) P.64 -Note 44

[15] மயிலை சீனி வேங்கடசாமி, கிறஸ்தவமும் தமிழும், 1936

[16] முன்னது பக்.75

[17] பார்க்க:- Sascha Ebeling & Margherita Trento, 2018

[18] Complexity International Journal CJI, Dec 2020

[19] Gregory James (2019),The Pesky Ablative: Early European Missionaries, Journal of Portugese Linguistics, 2019ந ; Complexity International Journal (Dec. 2020);

[20]Catholic Encyclopaedia, (https://www.newadvent.org/cathen/02526c.htm) -  Costanzo Giuseppe Beschi "Born at Castiglione in the Venetian Republic, 1680; died at Manapar c. 1746.

[21] C.S Srinivasacharyalu, Article in  Indian Antiquary, Vol LVL January  (1927); Margherita Trento (2022); Henry & Owen Chadwick (Ed), Christianity in India From the Beginnings to The Present, Oxford History of Christian Church, First Edn 2008; India and Its Missions, The capuchia Mission Unit (CSMC), Macmillan Co. Newyork, 1923

[22] எஸ். இராஜமாணிக்கம், எஸ்.ஜே., 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 66-67

[23] முன்னது.

[24] பார்க்க:- Anand Amaldoss, Gift of the Conch-shell, Tiruchy, 2018

[25] He died at Ambalakaadu in Thrissur, Kingdom of Cochin (now a part of the state of Kerala), and is buried at St. Francis Xavier's Church, Sampaloor, where his tomb can be seen. https://www.howold.co/person/constanzo-beschi

[26] Kingdom of Cochin, Ambalakkaru, India or Manapad, Tamilnadu, India, Resting Place: Sampaloor, Kerala or manapad, Tamilnadu

[27] See https://tamilnation.org/literature/veeramamunivar.htm- The tradition that he was at one time prime minister to a native raja is not sufficiently authenticated’;     Joseph McCabe, The Jesuits : Religious Rogues (1927) One, Father Beschi, won a native prince, became his chief minister, and rode about with an escort of thirty horse and a band.; Also Amaladass (2018)

[28] See - Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, Constanta Gioseffo Beschi 

( 1680-1747), The great Heroic Sage,2018 [ The existing literature on Beschi contains numerous errors and variations in dates, names and other information, as all of them are copied time and again without verification.]

[29] See- The Month 1889-08: Vol 66 Iss 302- ‘’From the correspondence of Father Beschi, and the letters addressed to him by his superiors and fellow-religious in Europe, it may be gathered that the superb advan was in truth esteemed by savants, and treated with distinction by Nabobs and generals ; but he remained ever what he had been, a poor missioner of Madura, living on rice and water, and clad in the yellow calico of the sanzasszs (Indian penitents).”

[30] See Julius Richter, 1908 (Translated by Sydney H Moore.

[31] நான்கு அதிமுக்கியமற்ற (பெஸ்கியின்) கடிதங்களே இதுவரை பல ஆய்வாளர்களால் தேடப்பட்டு இனங்கானப்பட்டுள்ளன.