Friday, December 17, 2021



தேர்ந்த, காய்தல் உவத்தலில்லா விமர்சனப் பார்வையைத் தமிழிலக்கியப் பரப்பில் நிறுவி நின்ற   இலக்கிய விமர்சகர், ''கல்விச் சூழலில் தீவிரவாதி' என்று கவனித்து மதிப்பிடப்பட்ட பல்கலைக்கழக ஆளுமை, தமிழ்ச் சிறுகதை வரலாறு'(1979)  நூல்வழியே இக்களத்து முன்னத்தி ஏர்  எனும் சிறப்புடைய பேராசிரியர் வேதசகாய குமார் அவர்கள்( 1949-2020) பிரிந்த முதலாண்டு நினைவு இன்று (17-12) என்பதை அவரது முதல் ஆய்வு மாணவர் முனைவர் அ. சஜன் அவர்கள் ( மார்த்தாண்டம் நேசமணி நினைவுக் கிறிஸ்துவக் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியர்) எனக்கு நினைவூட்டினார். 

அறிவார்ந்த ஆய்வும் கூர்ந்த விமர்சனப்பார்வையும் கொண்டு சிறந்து நின்ற அமரர் பேராசிரியர் வேதசகாய குமார் அவர்களுக்கு என் அஞ்சலியாக, விரைவில் வெளிவரவுள்ள 'பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்' எனும் எம் தொகுப்பில் இடம்பெறும்  இந்த அத்தியாயத்தை முன்வைக்கிறேன். - இராஜ முத்திருளாண்டி. 


*

 மழை.


முகப்பு:       

 

அனுபவங்களைக் கதைகளாக்கும் ஆற்றல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. தனது புதுச்சேரி வாழ்க்கையில் நிகழ்ந்ததொரு சாதாரண அனுபவம் பாரதியின்  ,அற்புதமான  கதை சொல்லும் ஆற்றல் காட்டும் எழுத்தொளியாகிறது.. இதனைப் பெ.தூரன் “கட்டுரை” என்றே குறிப்பிடுகிறார். ஆனால், “ இரண்டாம் தொகுதியில் கதைக்கொத்து என்ற பகுதியில் வெளியாகியுள்ளது” என்று முரண் செய்தியும் தருவதோடு, தொடர்ந்து, “முதல் தொகுதியில், ஸ்வசரிதையும் பிற பாடல்களும்  என்ற பகுதியில் மழை என்ற தலைப்பில் உள்ள பாட்டு இக்கட்டுரையில் வந்ததேயாகும்” எனச்சொல்லி  இக்கதையைக் கட்டுரையாகவே கணிக்கிறார்.(பாரதி தமிழ், பக் 295).

 

‘சிறுகதை வரலாற்றாசிரியர்கள் பலரும் பாரதியை’ - சிறுகதைத் துறையில் ‘பாரதியின்முக்கியத்துவம்’ காணாமல்- ‘விட்டுச்சென்றிருக்கின்றனர்’ என்ற உண்மையை உரத்துச் சொல்லியிருப்பதோடு, (தமிழ்ச் சிறுகதை வரலாறு,1979, பக்20) ‘சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைப் பாரதி அறிந்திருந்தார்’ என்றும்  உறுதியொலிக்கக் கூறியுள்ள பேராசிரியர் வேதசகாயகுமார்,  இச்சிறுகதையைக் கொண்டே காய்தல் உவத்தல் இன்றிப் பாரதியைத் தமிழ்சிறுகதை வரலாற்றுக்களத்தில் மதிப்பீடு செய்கிறாரென்பது( 1979, பக்.25-26), ‘மழை’ கதையா? கட்டுரையா? எனும் விவாதத்திற்கான முற்றுப்புள்ளி.

 

‘இயற்கை என்ற மகாசக்தியின் முன் மனிதன் வெறும் அற்பம், அதனை அவன் அடக்கியாள்வதாக இவன் நினைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு மடமை என்பதுதான் அவர் சொல்ல வந்த விஷயம். விஷயம் அனுபவ வெளிப்பாடாக உருவாவதிலும் வெற்றிதான்’ என வேதசகாயகுமார் இக்கதையை மதிப்பீடு செய்கிறார்.( பக் 25) இருப்பினும்,  தமிழ்ச் சிறுகதை மரபில் கலைப்படைப்புகளுள் ஒன்றாக நம் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கக்கூடும்’ என்று உள்ளாரந்த வெளிப்படைத் தன்மையுடன்  உரைத்துள்ள வேதசகாயகுமார் இறுதியில் பாரதி ‘...தர்ம போதனையைத் துவக்கி விடுகிறான்.கதை கலைப்படைப்பாக உருவாகி வந்து பிரச்சாரமாக வீழ்ச்சியடைகிறது’(பக் 26) என்ற பெருங்குறை சுட்டுகிறார்.( நேர்மையுடன் இதனை இங்கு குறிப்பிட்டு, வேதசகாய குமாருடன் – அவர் சுட்டியுள்ள குறையுடன்- இக்கருத்திலிருந்து மாறுபடும் எனது கருத்து நிறுவலை வேறொரு களத்தில் விரித்து விளக்குவதே சரியாக இருக்குமாதலால், பேராசிரியர் வேதசகாய குமார் அவர்களது ‘ பாரதி பிரச்சாரகன்’ என்ற கருத்தை(பக்26) ஒளிக்காது வாசகர்முன் இம் முகப்பில் வைத்து விலகி நிற்கத் தேர்த்துள்ளேன்.)

 

‘ சட்டச் சட, சட்டச் சட, டட்டா-என்று / தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்/ எட்டுத் திசையும் இடிய - மழை

எங்ஙனம் வந்ததடா?’ என்ற வரிகளுள்ள, இக்கதையிற் பொதிந்துள்ள பாடல்,  இந்தக் கதைக்காகவே பாரதியின் கவிதா வானத்திலிருந்து பொழிவாகியுள்ளதென்பதை முன் காட்டிய ‘பாரதி தமிழ்’ மூலம் நாம் அறிய முடிகிறது.   மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.என இயற்கையின் யாவற்றிலும் இனிது கண்டவனல்லவா பாரதி.? இக்கதை  12-7-1917இல்  வெளியானது

 

கதையின் ஆரம்பமே புதிய, சிறுகதைக்கான நேர்த்தியான, பரபரப்பான தொடக்கமாகக் – குதிரையோட்டம்போலத் -  தொடங்கப்பட்டுள்ளது (எடுத்த எடுப்பிலேயே, “ ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள்....) .’இவ்வரிகள்  கதையினுள் நம்மை நேரடியாக அழைத்துச் செல்கின்றன’ என்று சிலாகிக்கிறார் வேதசகாயகுமார். பிறகுதான் பாரதி சொல்கிறார் அவரும் சில நண்பர்களும் ‘கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம்’ என.

(கவனிக்க: வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம்’. குறிப்பிலாத, ‘sweet nothing’ chat பொதுப்படையான கடற்கரைப் பொழுதுபோக்குப் பேச்சு போலும்)

 

மழையில் தொப்பலாக நனைவதென்பது சாதரணர் பயன்பாடு; கவியூறித் ததும்பிடும் பாரதியோ நனைந்தது  ‘ஊறுகாய் ஸ்திதியில்’

 

இன்னும் ‘வழிமறிச்சானாக’ நானெதற்கு இங்கே?.

 

வாங்க.... ‘யானைத்திரள் போலவே மேகத்திரள் தலைமீது போக’ ,மின்னல் சூறையடிக்க’,   இடி நகைக்க’, ‘வர்ஷமாகச் சொரிந்த’ மழையில்.... கவிராஜனோடு இணைய...நனைய.

 


நுழைவு:

 

மழை

 

 

 

ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.

 நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.

 "நாமும் எழுந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.

 வேணு முதலியார் பாடுகிறார்:

 காற்றடிக்குது கடல் குமுறுது

கண்ணை விழிப்பாய் நாயகனே

தூற்றல் கதவு, சாளரமெல்லாம்

தொளைத் தடிக்குது கூடத்திலே-மழை

தொளைத் தடிக்குது கூடத்திலே.

"பாட்டெல்லாம் சரிதான், ஆனால் மழை பெய்யாது' என்று ராமராயர் மற்றொரு முறை வற்புறுத்திச் சொன்னார்.

 "பந்தயம் என்ன போடுகிறீர்?" என்று பிரமராய அய்யர் கேட்டார்.

 "மழை பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்: அதாவது, இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் மழை பெய்யாது என்று நான் சொல்லுகிறேன்; பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுப்பேன், பெய்யாவிட்டால் நீர் நமக்குப் பத்து ரூபாய் கொடுப்பீரா?" என்று ராமராயர் சொன்னார்.

 பிரமராயர், "சரி" யென்றார். அப்போது என் தோள் மேலே ஒரு தூற்றல் சொட்டென்று விழுந்தது. நான் "தூற்றல் போடுகிறது" என்று சொன்னேன். "இல்லை" யென்று ராமராயர் சொன்னார். "என் மேல் ஒரு தூற்றல் விழுந்தது" என்று சொன்னேன். அதற்கு ராமராயர், "அலையிலிருந்து ஒரு திவலை காற்றிலே வந்து பட்டிருக்கும். அது மழைத் தூற்றலன்று" என்றார். "சரி" என்று சும்மா இருந்து விட்டேன்.

 "என் மேலே ஒரு தூற்றல் விழுந்தது" என்று பிரமராய அய்யர் கூவினார்.

 "இதுவும் அலையிலிருந்துதான் வந்திருக்கும்" என்று ராமராயர் சொன்னார்.

 "அதெப்படித் தெரியும்?" என்று பிரமராய அய்யர் சொல்வதற்குள்ளாகவே தூற்றல் பத்துப் பன்னிரண்டு எல்லார் தலையிலும் விழுந்தது.

 "ராமராயருக்குப் பந்தயம் தோற்றுப் போய்விட்டது" என்று நான் சொன்னேன்.

 "இல்லை. இது தூற்றல். நான் சிறு தூற்றல் கூடப் போடாதென்று சொல்லவில்லை. மழை பெய்யாதென்று சொன்னேன். சிறு தூற்றல் மழையாக மாட்டாது. இன்னும் இரண்டு மணி நேரம் இங்கே இருக்கலாம். அதுவரை மழைபெய்யாது என்று நிச்சயமாக இப்போதும் சொல்லுகிறேன்" என்று ராமராயர் சித்தாந்தம் செய்தார். வானம் அதிகமாகக் கறுத்துவிட்டது. இருள் கக்கிக் கொண்டு மேகத்திரள் யானைத்திரள் போலவே தலைமீது போகலாயிற்று. தூற்றல் போடவில்லை. நின்றுபோய் விட்டது. ஆனால் இருள் மேன்மேலும் அதிகப்படுகிறது.

 அப்போது நான் சொன்னேன்: "மழை பெய்தாலும் சரி, பெய்யாவிட்டாலும் சரி. நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்" என்று சொல்லி எழுந்தேன்.

 "தாங்கள் முதலாவது போங்கள். நானும் பிரமராய அய்யரும் இங்கே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோம்" என்று ராமராயர் சொன்னார்.

 சரியென்று சொல்லி நானும் வேணு முதலியாரும் புறப்பட்டோம். மற்றவர்கள் அத்தனை பேரும் பந்தய விஷயத்திலேயே கவனமாக அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட்டு நூறடி தூரம் வருமுன்னாகவே மழைத் தூற்றல் வலுக்கத் தொடங்கிற்று. கொஞ்சம் ஓடிக் கடற் பாலத்தருகே சுங்கச்சாவடியில் போய் ஒதுங்கினோம். மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெறிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியாரும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.

 மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்...

 மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சிநேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை இடிபோலே கர்ஜனை செய்வதை யொட்டி. அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார். ராமராயருக்கும் மனத்துக்குள்ளே பயம். வெளிக்குப் பயத்தைக் காட்டினால் அவமானம் என்பது ராமராயருடைய கொள்கை! ஆதலால் அவர் வேஷ்டியைப் பிழிந்து தாடியைத் துவட்டிக் கொண்டு "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று சொல்லத் தலைப்பட்டார்.

 வேணு முதலியார் பாடத் தொடங்கினார்.

                                         திக்குக்கள் எட்டும் சிதறி-தக

தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம்

பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்

பாயுது, பாயுது, பாயுது, தாம் தரிகிட

 

தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்

சாயுது, சாயுது, சாயுது, பேய் கொண்டு

தக்கை யடிக்குது காற்று-தக்கத்

தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட

 

வெட்டி யடிக்குது, மின்னல்-கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது

கொட்டி யிடிக்குது மேகம்-கூ

கூ வென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச் சட, சட்டச் சட, டட்டா-என்று

 

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடிய-மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!-

தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்!

 

இவ்வாறு பாடிக் கொண்டு வேணு முதலியார் குதிக்கத் தொடங்கினார். காற்று ஹ¤¤¤ என்று கத்துகிறது. வேணு முதலியாரும் கூடவே கத்துகிறார். இடி நகைக்கிறது. வேணு முதலியார் அதனுடன் கூட நகைக்கிறார்.

 இவர் குதிக்கிற மாதிரியைக் கண்டு பக்கத்தில் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் தெளிந்தது.

 ராமராயர் "ஓம் சக்தி" மந்திரத்தாலே பயத்தை நிவர்த்தி செய்துகொண்டு "மகா பிரகிருதி வீரரசம் காட்டுகிறாள்" என்று சொன்னார். "ரௌத்ர ரசம் என்று பிரமராய அய்யர் திருத்திக் கொடுத்தார். "இரண்டும் ஒன்றுதான்" என்று ராமராயர் மனதறிந்து பொய் சொன்னார். எதிரியை வார்த்தை சொல்ல விடக் கூடாதென்பது ராமராயருடைய கொள்கை. இப்படி யிருக்கையிலே மழை கொஞ்சம் கொஞ்சம் குறையலாயிற்று; நெடுநேரம் அங்கே நின்றோம். ராமராயருக்குச் சாயங்காலமே கொஞ்சம் ஜலதோஷம்; மழையில் உடம்பு விறைக்கத் தொடங்கிற்று. இதை வேணு முதலியார் கண்டு அவரை இரண்டு கையாலும் மூட்டைபோலே தூக்கி நிமிர்ந்து நின்று தலைக்கு மேலே கையெட்டும் வரை கொண்டு போய்த் தொப்பென்று தரையின் மேலே போட்டார். "அட மூடா!" என்று சொல்லி ராமராயர் எழுந்து நின்று கொண்டு, "உடம்பெல்லாம் சுடக்கெடுத்ததுபோல் நேராய் விட்டது. உடம்பில் உஷ்ணம் ஏறிவிட்டது. இப்போது குளிர் தெரியவில்லை" என்று சொன்னார்.

 சிறிது நேரத்துக்குப் பின் மழை நின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியே வேணு முதலியார் பாடுகிறார்.

 

அண்டங் குலுங்குது தம்பி-தலை

ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்

மிண்டிக்குதித் திடுகின்றான்-திசை

வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்

செண்டு புடைத்திடு கின்றார்-என்ன

தெய்விகக் காட்சியைக் கண் முன்பு கண்டோம்

கண்டோம், கண்டோம், கண்டோம்-இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்?

தக்கத்தகத் தக்கத்தக தித்தோம்.

 

மறுநாள் காலையில் ராமராயர் பிரமராய அய்யருக்குப் பந்தய ரூபாய் பத்தும் செலுத்திவிட்டார்.

**

( பல மாதங்களாக வேதசகாய குமார் அவர்களது  மதிப்புமிக்க படைப்பான ' தமிழ்ச் சிறுகதை வரலாறு' நூற்பிரதி கிடைக்காமல் அலைந்து முயன்று கொண்டிருந்தேன்.  இணையதளம் வாயிலாக முனைவர். அ.சஜன் பேராசிரியரது  முதல் ஆய்வு மாணவர் எனுந் தகவல் கிடைக்க, அவரைத்தேடினேன். அவர் பணியாற்றும் கல்லூரித் தளத்தில் அவரது தொடர்பு எண் கண்டு, தொடர்பு கொண்டு பேசிய முதல் நொடியிலேயே எனது தேடலை நிறைவு செய்யும் அன்புக் கொடையாக அவரிடமிருந்த அந்தப் பொக்கிஷ நூலின் முழுமையான நகலெடுத்துக் கூரியர் மூலம் அனுப்ப இனிப்புறுதி வழங்கினார்.     தனது பேராசிரியர் வேதசகாய குமார் குறித்த நேர்த்தியான,  நேர்மையான  தனது மதிப்பீட்டு நூலொன்றையும் பரிசாகக் கூட்டி விரைந்தனுப்பிய முனைவர். அ.சஜன் அவர்களது தமிழன்பிற்கு  எனது மகிழ்வும் நன்றியும் இங்கு பதியனிடுகிறேன். )

*

No comments:

Post a Comment