Friday, July 23, 2021

Date of Birth என்பது பிறந்த நாளல்ல

 (முன்பெப்போதோ இவ்விசயம் பதிவிட்டதைக் காணோம்.

ஆகவே இது.)


Date of Birth என்றால் 

பிறந்த நாளல்ல.


வேறென்ன? எனக் கேட்கிறீர்களா?


எங்களுக்கெல்லாம் (டிஸ்டிரிக்ட் போர்டு துவக்கப்பள்ளி , திருப்பூவனம்)

(மேற்கு) -  


ஐம்பது அறுபதுகளில் படித்தவர்களுக்கெல்லாம்


அப்படித்தான்!


எங்கள் பள்ளியின் தலைமையாசிரியாக இருந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.


எங்களது தொடக்கப் பள்ளி 

பெருந் தலைவர் காமராஜ் அவர்கள் 

பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளைக் திறந்த வரலாற்றின் ஒரு விளைவாகப் புதிதாகத் தோன்றியது.


சந்தைக்கருகில் இருந்ததால் "சந்தைப்பள்ளிக்கூடம்" என்றே அறியப்பட்டது.


 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ள பள்ளி அது. 


ஆறாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்.


திரு பாலகிருஷ்ணன் அவர்கள் எங்களூர்ப் பெருமாள் கோவில் அருகே (தொடங்கிப் பெரியகோவில் வரை நீளும்) அக்ரஹாரத்தில் குடியிருந்தார்.


எப்போதும் வீட்டிலிருந்து

 நேராகப் பள்ளிக்கு அவர் வந்திருக்கமாட்டாரென்றே கருதுகிறேன்.


பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வெகுமுன்னதாகவே கிளம்பி


எங்கள் பகுதிக்குள் (பழையூர்) வந்துவிடுவார்.


முதலில்

எங்கள் பகுதியின் பின்புறத்திலுள்ள

தாழ்த்தப்பட்ட

(வர்கள் எனச் சொல்லப்பட்டுவரும்) மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வார்.


தெருவில் விளையாடும் சிறுவர்களையெல்லாம் ( இருபாலரும்)

 பெற்றோர்களிடம் சொல்லிக் குளிக்க வைத்துத் தயார்படுத்தி- தானே சிலரைத் குளிக்க வைத்து-  

 Pied Piper பின்னால் 

( just for example, கூட்டமாக வரும் எலிகள் போல்) குழந்தைகள்

பத்து இருபது பேராவது பின்தொடர வந்து, 


எங்கள் பகுதிக்குள் நுழைவார். 


இங்கும் அதேபோலச் சிறுவர்களை ஆயத்தப் படுத்தித் திரட்டுவார்.


ஒரு இளம்படை காச்மூச் எனக் கத்திக்கொண்டு தொடரத் 

திரு பாலகிருஷ்ணன் சார் தெருவிஜயம் முடிந்து உள்நுழையவும் கிணிங்கிணி எனப் எங்கள் பள்ளி மணி அடிக்கும்.


இது தினப் பிரவேசம்.


இதுபோகப் பெற்றோர்கள் சிலர் தாமே குழந்தைகளை அழைத்துவந்து (அதெல்லாம் சும்மா. தரதரவென இழுத்து வந்து, வரும் வழியில் முதுகில் நாலு போட்டு) பள்ளியில் விடுவதும் வாடிக்கை.


இதையெல்லாம் விடச் 

சந்தை நாட்களில் சந்தைக்கு வரும் பெற்றோர் சர்வ சுதந்திரமாக வகுப்பில் 

தம் பிள்ளைகளை "இங்க உக்காந்து இரு, சந்தைக்குப் போய்ட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்" என அப்போதே ஒரு creche மாதிரி பாவித்து டீச்சர் ஒப்புதலுக்காக ஒரு புன்னகையை மட்டும் அவசரமாக உதறிவிட்டு  சரேலென்று சந்தைக்குச் சென்று விடுவார்கள்.


அவ்வாறு தற்காலிகமாக இலவச இணைப்பாக விட்டுச் செல்லப்படும் சிலர்

பெற்றோர் வந்து கூப்பிடும் போது ' வர மாட்டேன் போ' என அடம் பிடிக்கும் காட்சிகளும் அரங்கேறும். 


அடுத்து என்ன?

முதுகில் ஒரு அடி அல்லது காதைப்பிடித்துத் திருகி ஆசிரியர் இருப்பைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கொத்தாகக் தூக்கிச் செல்வார்கள்.


சரி...வாங்க...

பள்ளியைப் பார்க்க.


ஐந்து வகுப்புகளுக்கு 

மூன்று ஆசிரியர்கள்.


தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன் சார்.


ஒன்று இரண்டு வகுப்புகளுக்கு

அன்பே உருக்கொண்ட அம்மா 

மேரி டீச்சர்.


மூன்றாவது வகுப்புக்கும்

நான்காவது வகுப்புக்கும் டீச்சரின் கணவர் 

திரு பாலையா சார்.

(கெடுபிடி, பிரம்படி)


ஐந்தாம் வகுப்பு தலைமையாசிரியர் 

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் நேரடிப் பொறுப்பு.( Union Territory)


வகுப்பு என்பதெல்லாம் அறைகளால்/ சுவர்களால் பிரிக்கப்படுவது என்று நினைக்கும் பலர் 

நிச்சயமாக

ஏமாந்து போவீர்கள்.


ஒரு பெரிய ஹால்(.!)- ஓடு வேய்ந்தது.

ஹால் என்பதே பெரிய வார்த்தை தான். இருக்கட்டும் எங்கள் பள்ளி அல்லவா?


தலைமையாசிரியர் ஒரு முனையில். 


அடுத்து 1,2,4, கடைசியில் 3வது வகுப்புகள்.


எவ்விதத் தடையோ, பிரிவுச்சுவர்களோ இல்லாத பெருஞ்சமத்துவம் அது.


1 வது வகுப்புக்கும் 

2 வது வகுப்புக்கும் நடுவில் 

ஒரு சேர் மட்டும் போட்டு மேரி அம்மா டீச்சர் அமர்ந்திருப்பார்.


அடுத்த 4 ,3 வகுப்புகளிடையே 

டேபிள் சேர் போட்டு திரு பாலையா சார் இருப்பார்.


தலைமையாசிரியருக்கு இடது பக்கத்தில் சுவரோரம் ஒரு மரபீரோ நிற்கும். ஆவண அறை அது.


எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து திரு பாலையா சார் தான் அட்டெண்டெஸ் எடுப்பார்.


பெயர்கூப்பிட்டதும் மின்னலாய் எழுந்து வலதுகை தூக்கி ஒரு சல்யூட் அடித்து " ஆஜர்" சொல்லுவோம் 


முடிந்த அளவு உரத்த குரலில். தெருவெல்லாம் "ஆஜர்" கேட்கும்.


ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் "பிரசண்ட் சார்" 


ஆறாம் வகுப்பில் ABCD யெல்லாம் படிக்கனுமே.

அதற்கு ஆயத்தமாய் இந்த 'பிரசண்ட் சார்!'


சரி, விஷயத்துக்கு வருவோம்.


(இப்பத்தான் விசயத்துக்கே வருகிறோமா என முறைக்கிறீர்களா?) 

வாங்க.


தெருவில் திரிபவர்களையெல்லாம் பள்ளிக்கு அள்ளிக்கொண்டு வருவதால் 'பெர்த் சர்டிபிகேட்' எல்லாம் கேட்டு யாரையும் தொல்லைப் படுத்துவதில்லை பாலகிருஷ்ணன் சார்.


ஒரு எண்டரன்ஸ் டெஸ்ட் வைக்கப்படும் மேரி அம்மா டீச்சரால்.


பின்பக்கமாகக் கையைக்கொண்டு வந்து மூக்கைத் தொடவேண்டும்.

தொட்டுவிட்டால் அட்மிஷன்.


என்ன?

பேர் கூப்பிடுவார்கள்.

அவ்வாறு பின்பக்கமாக கைவைத்து மூக்கைத் தொடாதவர்களையும் வெளியேற்றுவதேயில்லே மேரி டீச்சர்.


அவர்கள்  'உப்புக்குச் சப்பாணி'யாக முதல் வகுப்பில் உட்காரவைக்கப் படுவார்கள்‌.


அவர்களைப்பாலையா சார் பேர் கூப்பிடமாட்டார்.

' ஆஜர்' சொல்ல முடியாது.


ஆனால்

மேரியம்மா டீச்சர் அவர்களையும் குஷிப்படுத்தத் தானே எழுந்து பெயர் சொல்லி ஆஜர் சொல்லச் சொல்லுவார்.


அட்மிஷன் எப்படி?


திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தேசபக்தர்.

கதர்தான் அணிவது. கணுக்கால் தெரிய வேட்டி. கைமறைய முழுக்கைச் சட்டை. கண்டிப்பும் கனிவும் உடுத்திய ஆறடிச் சிவப்பழகர்.

நீங்காது நீறு முப்பட்டையாய் நெற்றியில்.


'சேர்க்கலாம்' என்று முடிவு செய்யப்பட்டவர்களுக்குப் பிறந்தநாள் அவரே நிர்ணயித்து விடுவார்.


சுதந்திரதினம் ( ஆகஸ்ட் 15);


குடியரசு தினம் ( ஜனவரி 26);


காந்திஜி பிறந்தநாள் ( அக் 2);


பள்ளிகள் பல திறந்த காமராஜர் பிறந்தநாள் ( சூலை 15)


இந்த நான்குக்குள் ஏதாவது ஒருநாள்

சேர்க்கையின்போது ஐந்தாண்டுகள் நிறைவடையுமாறு பின்னோக்கி வருடம்  கணக்கிட்டுப் பதிவாக்கிவிடுவார்.


பின் சில சமயங்களில் யாராவது பெற்றோர் வந்து தம் "பையன் பிறந்த தேதி மாதம் வருடம் மாறியுள்ளதே" எனக்கேட்டால்


"எல்லாம் நல்ல நாள்தான் பதிந்திருக்கிறேன்.நல்லா வருவான் போங்கள்" என்பார்.


அவ்வளவுதான்.

பிறந்தநாள் விசயம் முற்றுப் பெற்றுவிடும்.


அப்படித்தான் செப்டம்பரில் பிறந்த எனக்கு

காமராஜர் பிறந்தநாள் (சூலை 15) பதிவாகியது.

அதுவே பணிமுழுதும் தொடர்ந்தது.


ஒரே ஒரு சிக்கல்.


நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டதால்,


ஐந்தாண்டுக் கணக்கிற்காக அப்படியே ஒரு ஆண்டு பின்னோக்கி வைத்துவிட்டார் பாலகிருஷ்ணன் சார்.


இது என்ன பெரிய சிக்கல்?


பலருக்கு இதுமாதிரிதானே நடந்துள்ளது என்கிறீர்களா?


திரு பாலகிருஷ்ணன் சார் எனக்குப் பதிவிட்ட பிறந்தநாள்/ ஆண்டில்

என் பெற்றோருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லையே.

No comments:

Post a Comment