ஞாயிறு, 11 ஜனவரி, 2026

 பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - சில ஆலோசனைகள்! 


இராஜ முத்திருளாண்டி 

 [ https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Nov/22/standard-guidelines-and-advice-for-holding-public-meetings  -Updated on:  22 நவம்பர் 2025, 6:38 pm ]


அண்மையில் 41 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய ''கரூர் பெருந்துயரைத்'' தொடர்ந்து தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், ‘சாலை உலாக்கள்’ நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை - உயிரிழப்புகள் நடந்த அடுத்த நாளே - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்துக் கட்சியினரையும் கலந்தாலோசித்து விரைவில் உருவாக்கப்படும் என்று அறிவிப்புச் செய்தார். பின்னர், இவ்விஷயம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் பரிசீலனையாகி, பத்து நாள்களுக்குள் தமிழக அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தடாலடியாக அக்டோபர் 27 அமர்வில் வற்புறுத்தியது.

அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) அவசர கோலத்தில் செய்யக்கூடிய வேலையல்ல. இவ்விஷயம் அனைத்து அரசியல் கட்சியினர், அரசுத் துறைகள், சேவை அமைப்புகள், வல்லுநர்கள் உள்ளிட்ட பலதரப்பினரது விரிவான கருத்துக்களைப் பெற்று, உரியக் கால அவகாசமளிக்கப்பட்டுப் பொதுவெளியிலும் பலநிலைகளில் விவாதிக்கப்பட்டு, இவற்றின்வழி சேகரிக்கப்படும் கருத்துக்கள் அதன்பின் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டுத் தொகுக்கப்பட வேண்டியதாகும். இத்தகைய மிக முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளைப் பத்தே நாள்களில் வடிவமைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மாநில அரசை உயர்நீதிமன்றம் முதலில் வற்புறுத்தியது சரியேயல்ல.

என்றாலும், 10-11-2025 விசாரணை அமர்வில், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘வரைவு வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக பல்வேறு நிர்வாக நிலைகளில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், நவம்பர் 6 ஆம் தேதி 20-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும், மேலும் 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக் கருத்துக் கேட்டு SOP வரைவு நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், தகவல் அளித்தார். கருத்துகளைச் சேகரிக்கவும், மேலும் ஆலோசனைகளை நடத்தி வரைவை இறுதி செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். ஆனால், நியாயமான அக்கால அவகாசத்தை அளிக்காமல், நீதிமன்றம், மேலும் 10 நாள்கள் (நவம்பர் 20 வரை) மட்டுமே அவகாசம் அளித்தது.

தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அமர்வில் (21 நவம்பர் 2025) , கூடுதல் அட்வகேட் ஜெனரல் 46 பக்கங்கள் கொண்ட எஸ்ஓபி-யின் இறுதி வரைவு நகலைச் சமர்ப்பித்தார் என்றும், பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள், பல்வேறு பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 16 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சமர்ப்பிக்கப்பட்ட SOP விதிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமானால், தற்போது நீதிமன்றத்தின் முன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், ஒரு முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளாக அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. முதல் காரணம், இது நீதிமன்ற நிர்பந்தத்தால் அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் அவலங்கள் நம் நாட்டில் மேலும் நடைபெறா வண்ணம் நம் நாட்டில் ஏற்கெனவே முயன்று வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு உருவாக்கிய பெருந்திரள் மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்களை நிர்வகிப்பது குறித்த (2014) வழிகாட்டுதல்கள்; தேசிய காவல் இயக்ககத்தின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள ‘கூட்டக் கட்டுப்பாடு மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், 2025, பிற மாநிலங்களில் ( உ.பி., குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம்) உள்ள கூட்ட மேலாண்மை ஒழுங்காற்று விதிகள் ஆகியவற்றை நன்கு பரிசீலித்து, அவற்றின் சிறந்த கூறுகளைத் தெரிந்து, சேகரித்து வரைவு செய்யப் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் ( நவம்பர் 6, 2025) வழங்கப்பட்ட வரைவு நெறிமுறைகளை அக்கட்சிகள் தமது அமைப்புகளில் விவாதித்துக் கருத்துகளைத் திரட்டி வழங்கப் போதிய கால அவகாசம் ஏதும் வழங்கப்படவில்லை. நவம்பர் 6 கூட்டத்திற்குப்பின், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு வரைவு நெறிமுறைகளை அனுப்பிக் கருத்துக் கேட்கப்பட்டிருப்பதாக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட வரைவு நெறிமுறைகள் குறித்து எத்தனை கட்சிகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன என்பதும், பெறப்பட்ட கருத்துகளைச் சரிபார்த்துத் தொகுத்து வழங்கப் போதிய கால அவகாசம் இருந்திருக்குமா என்பதும் தெரியவில்லை.

மேலும் SOP குறித்து அரசியல் கட்சிகளிடம் மட்டும் ஆலோசனை பெற்றால் போதாது. பேரிடர் மேலாண்மை, கூட்ட மேலாண்மை வல்லுநர்கள், கூட்டங்களால் உயிர் இழப்புகளைச் சந்தித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நெரிசல்களிலிருந்து நல்வாய்ப்பாகத் தப்பித்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பொது வெளியில் விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் அடிப்படையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே நியாயமானது.

வழிகாட்டு நெறிமுறைகள் என்பது எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும் சமய நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு அளித்திருப்பது சரியல்ல. ஹரித்துவார் கும்பமேளா 1820-இல் உயிரிழப்புகள் 430; அலாகாபாத் (உ.பி) கும்பமேளா 1954-இல் கூட்ட நெரிசல் மரணம் 500 - 800 பேர் வரை; 2005-இல் மகாராஷ்டிரம், மந்தேர் தேவி கோயில் நெரிசல் சாவு 291; 2008 (செப்டம்பர்) ராஜஸ்தான், சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் பலி; கடந்த ஆண்டில் (2024) உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் மதப் பிரசங்க நிகழ்வில் 121 பேர்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது என்பதெல்லாம் பாடமாக இருக்க வேண்டும் அல்லவா?

ஐந்தாயிரம் பேருக்குக் குறைவான கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது என்பதும் ஒரு சரியான உத்தேசம் அல்ல. நடைமுறையிலுள்ள காவல் சட்டம் 1861 (பிரிவுகள் 30,31,32) கூட்ட மேலாண்மை குறித்த தெளிவான ஏற்பாடுகளை வரையறுப்பதாக இல்லை என்பது முன்பிருந்தே உணரப்பட்டுவரும் குறைபாடாகும்.

கூட்டம் எந்த அளவினது ஆயினும், அடிப்படை வசதிகள் (உணவு குடிநீர், கழிப்பறைகள், தீத்தடுப்பு, முதலுதவி) முதலிய ஏற்பாடுகளும் பாதுகாப்பு அம்சங்களும் எந்த வகையிலும் குறைவில்லாததாகவே இருக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் உடல் திறன் மாறுபட்டவர்கள் முதியோர், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். காத்திருப்பு நேரம், நிகழ்வுகளின் மொத்த நேரம் குறித்த வரையறைகள், அவசரகால வெளியேற்ற வழிகள் என்பவை அனைத்துக் கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும்.

கூட்டங்களில் ஏற்படும் இழப்புகள் (பொதுச்சொத்து, தனியார் சொத்துகளுக்கான சேதங்கள் உள்ளிட்டவை) குறித்து வழிகாட்டு நெறிமுறைகளில் நிகழ்வுகளுக்குப்பின் பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் செம்மையாகச் செயல்படுத்த , சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கரூர் நிகழ்வு தொடர்பான வழக்கொன்றில் குறிப்பிட்டதுபோல, கூட்டம் / நிகழ்வுக்கு அனுமதி பெறும்போதே ஒரு குறிப்பிட்ட அளவு, நியாயமான தொகையை - தேவை ஏற்படாவிட்டால் திரும்பப் பெறக்கூடியதான முன் பணமாக - வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என நிர்ணயிப்பது கூட்ட ஏற்பாளர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கும். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் இழப்புகளுக்குப் பொறுப்பேற்கப் பிணைப்பத்திரம் பெறும் நடைமுறையும் இணைக்கப்பட வேண்டும்.

கூட்டம்/ நிகழ்வு நடத்த எவ்வளவு நாள் முன்பு அனுமதி கோரி விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயித்திருப்பதுபோல, அனுமதி அளிக்கும் அலுவலர் எவ்வளவு நாள்களுக்குள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து - விதிக்கப்படும் நிபந்தனைகளைக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்ய ஏதுவாக உரிய கால அவகாசம் தரும்வகையில் – விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்க வேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட வேண்டும்.

கூட்டங்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அடையாளம் காணும்போது, அது ஒருதலை பட்சமாக நிகழாமல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சியினர், சேவை அமைப்புகள் காவல்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல தரப்பினரையும் கலந்து ஆலோசித்து இசைவுடன் உரிய இடங்களாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

கூட்டம்/ நிகழ்வு நடந்த பின்னர் திடக்கழிவுகள் அகற்றுதல், நிகழ்விடத்தை முன்பிருந்த நிலைக்குச் சரிசெய்து அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாக வைக்கும் ஏற்பாடுகளுக்கான கட்டணம்/ தனியே முன் வைப்புத்தொகையாகச் செலுத்தப்பட வழிகாட்டு நெறிமுறைகளில் விதிக்கப்பட வேண்டும்.

உயிரிழப்புகள் ஏற்படாத நோக்கில் உரிய ஏற்பாடுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டாலும், ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் கூட்ட ஏற்பாளர்கள் பொறுப்பேற்பதை உறுதி செய்யும்வகையில், பொது, குழு காப்பீடு வாய்ப்புகளைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஆலோசித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அத்தகைய காப்பீடுகள் செய்ய அரசுத் தரப்பில் முன்னெடுப்புகள் வேண்டும்.

அடிப்படையில், தற்போது நீதிமன்றத்தின் முன் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் போதுமான அளவு விரிவாகப் பல நிலைகளில் கலந்து ஆலோசிக்கப்பட வாய்ப்பில்லாமல் – உயர்நீதிமன்றம் நிர்ணயித்த மிகக் குறைந்த காலத்திற்குள்- நீதிமன்ற நிர்ணயத்திற்கு மதிப்பளித்து- அவசரமாக வரைவு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றமே வரைவு SOPஐ பொது வெளியில் தக்கவாறு விவாதித்துக் கருத்துகள் பெற்று இதனைச் செம்மைப்படுத்த ஏதுவான ஆணைகள் பிறப்பிப்பது மிகவும் வரவேற்க உரியதாகும்.

அனைத்துத் தரப்பிலும் விரிவாகக் கருத்துகள் பெற்று வடிவமைக்கப்படும் SOP எதிர்ப்புகளின்றி எளிதாகச் செயல்படுத்தப்படும் வாய்ப்புகள் பெருகும். கூட்ட நெரிசல்களில் மனித உயிர்கள் இழப்பு என்பது பழங்கதையாக வேண்டும்!

**

 நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் 

எளிதாக நடைமுறைப்படுத்த ஏதுவானதா? 


இராஜ முத்திருளாண்டி 


 [ https://www.dinamani.com/editorial-articles/special-stories/2026/Jan/10/are-the-standard-operating-procedures-easy-to-implement     Updated on:  10 ஜனவரி 2026, 3:46 pm ]



பத்து நாள்களுக்கு முன் நாம் கடந்துவந்த ஆண்டில் (2025) செப்டம்பர் மாதத்தில் கரூரில் புதிய அரசியல் கட்சியொன்றின் பரப்புரையின்போது 41 மனித உயிர்கள் கொத்தாகப் பலியான பெருந்துயரை மறக்கவும் கூடுமோ? நிலைத்துள்ள கனத்த கரூர் சோகப் பின்புலத்தில், பொதுக் கூட்டங்களை, சாலை வலங்கள் ஒழுங்குபடுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. இடையில், இவ்விஷயத்தில் நீதிமன்றத் தலையீடுகளும் நிகழ்ந்ததை நாமறிவோம். மிக அண்மையில், மாநிலத்தில் பொதுமக்கள் கூடும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) தமிழ்நாடு அரசால், அரசாணை மூலம் (G.O No 5 Home (Police VIII) Department, Dated 5-1-2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்க உரிய செயல்பாடுதானிது.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டன, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சாலை வலங்கள், பெரிய அளவில் மக்கள் கூடும் பல்வேறு நிகழ்வுகள் முதலியன ஜனநாயக வெளிப்பாடுகளிலும், குடிமக்களின் கலாசார, மத நடைமுறைகளிலும், ஈடுபாடுகளிலும் இன்றியமையாதவை ஆகியுள்ளன. என்றாலும், 'கட்டுப்பாடற்ற கூட்டங்கள் மனித உயிர், பொது ஒழுங்கு, அரசு, தனியார் சொத்துகளுக்குச் சேதம் மற்றும் ஆபத்துகளையும் விளைவிக்கக் கூடும்' என்ற அனுபவ எச்சரிக்கை பொதிந்த முகப்புரையுடன் தற்போதைய எஸ்.ஓ.பி. அறிவிப்பாகியுள்ளது. இந்த எஸ்.ஓ.பி. பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமல்ல, ஊர்வலங்கள், ‘ரோடு ஷோ’ எனப்படும் தலைவர்களது 'சாலை வலங்கள்' முதலியவற்றுக்கும் சேர்த்தே செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்தளித்துள்ளது.

இந்த எஸ்.ஓ.பியைச் சற்று விரிவாக அலசிப் பார்ப்பதற்கு முன், ஒரு பறவைப் பார்வையாகக் காணும்போது, நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் கடமைப் பொறுப்புகள் (Vide SOP Section 9), காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு (SOP Section 10) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நிகழ்வில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி உறுதி செய்வதற்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களே முதன்மைப் பொறுப்புக் கொண்டவர்கள் என்பதை எஸ்.ஓ.பி. தெளிவாக வலியுறுத்துகிறது [Preamble d) iii].

Advertisement ஆரம்பத்திலேயே, இந்த எஸ்.ஓ.பி.யின் முகப்புரையில் (உட்பிரிவு d) அரசின் பங்காக என்னென்ன உறுதி செய்யப்படும் என்ற முக்கியமான அம்சம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசுத் தரப்பில்,

  1. ஏற்பாட்டாளர்களுக்கும், நிகழ்வுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் (நிகழ்வு நடத்த அனுமதிக்கப்பட்டால், எந்தவொரு வெளிப்புற சக்தியாலும் தொந்தரவு செய்யப்படாது).

  2. அனுமதிக்கப்படும் நிகழ்ச்சி, எவ்வகையிலும் பொதுமக்களுக்குத் தொந்தரவு, அசௌகரியத்தை ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்படும்.

  3. நிகழ்வை நடத்துவதால் போக்குவரத்து, பொது ஒழுங்கு போன்றவை பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்யும்.

இதனுடன், முன்னர் குறிப்பிட்டுள்ளவாறு பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி உறுதி செய்வதற்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களே முழுப்பொறுப்பு என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட வேண்டும். அடிப்படையில், இந்த எஸ்.ஓ.பி. நான்கு அடுக்குகள் கொண்டதொரு செயல்பாட்டு நடைமுறைகளை வகுப்பதாக அமைந்துள்ளது.

  1. நிகழ்வு நடத்த விரும்புவோர் உரியவாறு விண்ணப்பம் அளிக்கும் நிலை (Pre-Event Application Process-SOP Section 5).

  2. விண்ணப்பம் பரிசீலனை, அனுமதி வழங்கல் நிலை (Scrutiny and Approval Process-SOP Section 6).

  3. நிகழ்வு மேலாண்மை (Managing the Event).

  4. நிகழ்வுக்குப் பிந்தைய நிலவர மதிப்பீடு (Post-event Assessment of compliance, complaints etc- SOP Section 12).

எஸ்.ஓ.பி. எந்த நிகழ்வுகளுக்குப் பொருந்தும்?

இந்த எஸ்.ஓ.பி. 5,000 பேருக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருக்கும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், சாலை வலங்கள் பவனிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முதலியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் குறைவாக இருக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் இந்த எஸ்.ஓ.பி. பொருந்தாது. அவ்வாறான நிகழ்வுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்படும் மதக் கூட்டங்கள், முன்னுதாரணங்களால் இடம் / பாதை முதலியன ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட மத நிகழ்வுகளை இந்த செயல்பாட்டு நடைமுறைகள் கட்டுப்படுத்தாது. அதுபோலவே, தேர்தல் காலங்களில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள், மாதிரி நடத்தை விதிகள் (எம்.சி.சி.) நடைமுறையில் இருக்கும் காலங்களில், கூட்டங்கள் நடத்த 'சுவிதா' போர்ட்டல் மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டியதிருக்கும். இருப்பினும், கூட்டப் பாதுகாப்பு விதிமுறைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் தொடர்புடைய அத்தியாவசிய வசதிகளை வழங்குவது தொடர்பான நிகழ்வு அமைப்பாளரின் பொறுப்புகள் எஸ்.ஓ.பி.யில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தொடர்ந்து பொருந்தும்.

16 பக்க எஸ்.ஓ.பி.

மொத்தம் 56 பக்கங்கள் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் 16 பக்க இணைப்பாக வழங்கப்பட்டிருப்பதே கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) ஆகும். இதனுடன் (1முதல் 7 வரை) படிவங்களும் அதற்கடுத்து இரண்டு பிற்சேர்க்கைகளும் உள்ளன.

படிவங்கள் 1, 2.5.

எஸ்.ஓ.பி.யுடன் உள்ள படிவங்களில் குறிப்பாக, படிவம்-1 என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், (சென்னையைப் பொருத்தவரை சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர்) தத்தமது ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் எந்தெந்த இடங்களில், விதிக்கப்படும் நிபந்தனைகளுக்குள்பட்டு பொதுக் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தலாம்; எந்தெந்த வழித்தடங்களில் ஊர்வலங்கள், சாலை வலங்கள் நடத்தலாம்; ஒவ்வொரு இடத்திலும் அதிக அளவாக எவ்வளவு பேர் நின்றுகொண்டோ, அமர்ந்தோ திரள முடியும் என்பதை முன்கூட்டியே உரியவாறு நிர்ணயித்து, அறிவிப்புச் செய்து வைத்திருக்கும் (Designated places/ routes-vide section 4 of the G.O.) தகவலைக் கொண்டதாக இருக்கும்.

கூட்டம் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த விரும்புவோர், அந்தந்தப் பகுதி காவல் நிலைய ஆளுகையுள்ள காவல் துறை அதிகாரியிடம் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி நேரில் அளிக்கப்பட உரிய விண்ணப்பம், படிவம்-2. இப்படிவங்கள் இரண்டுடன், நிகழ்வினை நடத்த வழங்கப்படும் நிபந்தனைகள் அடங்கிய அனுமதியும் (படிவம்-5) நிகழ்வுகளை, பொதுக் கூட்டங்களை நடத்தக் கருதுவோர்களால் கூர்ந்து கவனங்கொள்ள உரியதாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இனி, மாநிலத்தின் எப்பகுதியிலும் (முன்னர் குறிப்பிட்ட படிவம்1இல்), அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இடங்கள், வழித்தடங்களில் மட்டுமே, கணித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் கூட்டம் அல்லது பிற நிகழ்வுகளை நடத்த முடியும்.

அறிவிப்புச் செய்யப்படாத வேறு இடங்களில் நிகழ்வுகளை நடத்துவதாயின், அவ்விடத்தின் அமைப்பு, பரப்பு, கூட்டக் கொள்ளளவு முதலியன குறித்துப் பொதுப் பணித் துறைப் பொறியாளர் அளிக்கும் சான்றிதழ், கூட்டம் நடத்த நிலம் / இட உரிமையாளரின் எழுத்துப்பூர்வ இசைவு, நுழைவு, வெளியேற்ற வழிகள் முதலியன தெளிவாகக் குறிப்பிடப்பட்ட தளவரைபடம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட அவசியமாக்கப்பட்டுள்ளது. (எஸ்.ஓ.பி. படிவம் 2, பிரிவு 4)

அனுமதி கோரும் விண்ணப்பம் (படிவம்- 2)

கூட்டம் நடத்த அனுமதி வேண்டி காவல்துறை அலுவலரிடம் நேரில் விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் விரிவான பல விவரங்களுடனும், இணைப்புகளுடனும் அளிக்க வேண்டியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளிப்பவர் அல்லது நிகழ்வு ஏற்பாட்டாளர் குறித்த முழு விவரங்கள்; நிகழ்வு என்ன வகையானது? (பொதுக்கூட்டம், ஊர்வலம், சாலை வலம் போன்றவை); நிகழ்வு நடத்த உத்தேசித்துள்ள இடம் அல்லது வழித்தடம் (படிவம்-1ன்படி அங்கீகரிக்கப்பட்டதா?) குறித்த விவரங்கள்; நிகழ்வு நாள், நேரம் (தொடக்கம், முடிவு) ஆகியன அளிக்க வேண்டும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஊர்வலமாக இருந்தால், எங்கு தொடங்கி, எவ்வழிச் சென்று எங்கு முடியும் என்ற விவரங்கள் (ரூட் மேப்புடன்); முதன்மை விருந்தினர் வருகையும் அங்கிருந்து, வெளிச் செல்லும் நேரமும்; எதிர்பார்க்கப்படும் கூட்ட அளவு; நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கியத் தலைவர்கள், பேச்சாளர்கள் விவரங்களுடன் முழு நிகழ்ச்சி நிரல், எதிர்பார்க்கப்படும் வாகனங்களின், எண்ணிக்கை, அவை முறையாக நிறுத்தப்படும் இடம், அளவு, பிற ஏற்பாட்டு விவரங்கள், 50 வாகனங்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ள விவரம் ஆகியன யாவும் விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும்.

நிகழ்வானது ‘சாலை வலம்’ என்றால், இடம், எங்கிருந்து எதுவரை, எங்கே நிறுத்தம் / பேச்சு, நிகழ்வு நாள், நேரம், முதன்மை விருந்தினர் வருகை நேரம் (தொடக்கத்தில், முடிவில்), எதிர்பார்க்கும் கூட்ட அளவு வழியில் ஒவ்வொரு இடத்திலும், தொடரும் வாகனங்கள் எண்ணிக்கை, கூட்டத்தின் அளவு குறித்து பொதுப் பணித் துறைப் பொறியாளர் மதிப்பீட்டுச் சான்று (இணைப்பு), சாலையைப் பராமரிக்கும் / நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ள விவரம் ஆகியன இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில், கூட்டத்திற்கான பாதுகாப்பு, பிற வசதிகள் குறித்த முழு விவரங்கள், முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவர், செவிலியர், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் ஏற்பாடு, கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு வேலிகள், பிரிவுகள், தடுப்புகள், கயிற்றுத் தடுப்புகள், கூட்ட மேலாண்மைக்கென 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் ஏற்பாடு, முதலிய பல்வேறு விவரங்களும் முழுமையாக விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும். இவற்றுடன், இடம், சாலைப் பயன்பாட்டுக்கு உரிய அனுமதி, மதிப்பீட்டுச் சான்றுகளுடன், விதிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் மீறப்படாமல் கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதிமொழியளித்து விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு விண்ணப்பத்தை உரிய காவல்துறை அலுவலரிடம் (கவனிக்க) நேரில் வழங்க வேண்டும். கூடுதலாகத் தனியே படிவம் -3 இல் நிபந்தனைகள் அனைத்தையும் பொறுப்போடு ஏற்றுச்செயல்பட ஒரு 13 அம்ச இசைவும் எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும்.

அனுமதி கோரும் விண்ணப்பம் எப்போது அளிப்பது?

  1. அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இடத்தில் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாளுக்குப் பத்து (10) நாள்களுக்கு முன் (21 நாள்களுக்கு முன் அமையாமல்) விண்ணப்பம் முன் விவரிக்கப்பட்டவாறு சமர்ப்பிக்க வேண்டும்.

  2. அறிவிக்கப்படாத, மாற்று இடத்தில் நிகழ்வு திட்டமிடப்பட்டால், முன்மொழியப்பட்ட தேதிக்கு பதினைந்து (15) நாள்களுக்கு முன்பு, (ஆனால் முப்பது (30) நாள்களுக்கு முன் இல்லாமல்) வழங்க வேண்டும்.

  3. கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு, எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக இருந்தால், நிகழ்வுக்கு முன்மொழியப்பட்ட தேதிக்கு 30 நாள்களுக்கு முன்பே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

  4. மேற்கண்ட 1 & 2 க்கு விதிவிலக்காக, திடீர் சம்பவங்கள் அல்லது விஷயங்களால் எழும் அவசர ஜனநாயக வெளிப்பாடுகளுக்கு அவசியமான போராட்டங்கள் அல்லது கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் / பெருநகர சென்னை காவல்துறை ஆணையர், தங்கள் விருப்பப்படி, விண்ணப்பத்தைப் பெறவும், அதனை SDPO-யால் பரிசீலனை செய்யவும் அனுமதிக்கலாம்.

ஒப்புகை, அனுமதி, நிபந்தனைகள்

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் அலுவலர், அதற்கான ஒப்புகையைப் படிவம்-4இல் உள்ளவாறு வழங்க வேண்டும். அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து 18 நிபந்தனைகள், தேவைப்படும் கூடுதல் நிபந்தனைகளுடன் நிகழ்வு நடப்பதற்குக் குறைந்தது 5 நாள்களுக்கு முன் அனுமதி அல்லது அனுமதி மறுப்பு வழங்கப்படும்.( எஸ்.ஓ.பி. பிரிவு 6 d).

அனுமதி மறுக்கப்பட உரியதானால், படிவம்-6 இல் கண்டுள்ளவாறு உரியக் காரணங்களைப் பட்டியலிட்டு, குறைகளைக் களைந்து, மீண்டும் மாற்றிடம் வேண்டியோ, பிற நாளிலோ அனுமதிக்காக விண்ணப்பிக்க வாய்ப்பளித்து ஆணை பிறப்பிக்கலாம். நிகழ்வு நடந்தபின், இடம், சேதங்கள், திடக்கழிவுகள் முதலியவற்றை மதிப்பீடு செய்து அபராதம், இழப்பீடு முதலியன விதிப்பது வழக்குத் தொடர்வது குறித்தது படிவம் -7.

எஸ்.ஓ.பி. எளிதாகச் செயல்படுத்த ஏதுவாக உள்ளதா?

அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஓ.பி. மிக விஸ்தாரமானது என்ற தோற்றம் உள்ளது. இரண்டு பிற்சேர்க்கைகளாக இணைத்திருப்பவற்றுள் (Annexures A & B) சில பொதுவான, நிலைத்த (ஸ்டாண்டர்டு) கருத்துகள், ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு சதுர மீட்டருக்கு நிற்பதென்றால் எத்தனை பேர்?, அமர்ந்திருந்தால் எத்தனை பேர், எத்தனை பேருக்குள் இருந்தால் இலகுவாக ஒரு இடத்திலிருந்து கூட்டத்திற்குள் மற்ற இடங்களுக்கு ஒருவர் வசதியாக நகர அல்லது பரவ இயலும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற தெளிவான செயல்முறை எஸ்.ஓ.பி.யில் இல்லை.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டவாறான ஏற்பாடுகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரால் நிகழ்வு நடக்கும் வரை செய்யப்படாவிட்டால் என்ன செய்வது? அல்லது அனுமதி அளிக்கப்படும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பாட்டாளர் நிகழ்வு நடக்கும் வரை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? பார்வையாளர்கள் காத்திருப்பு நேரம் விதிக்கப்பட்டுள்ள 2 மணி நேரத்திற்கு மேல் முக்கியப் பிரமுகரின் வருகை பெரிதும் தாமதமானால் என்ன செய்வது?

விண்ணப்பம் அளிக்க வரையறுக்கப்பட்டுள்ள காலம் (10 நாள்களுக்கு முன்), நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள காலம் (நிகழ்வுக்கு 5 நாள்கள் முன்) ஆகியவற்றுக்கிடையே, விதிக்கப்பட்டுள்ள பற்பல நிபந்தனைகளின்படி உறுதியான கட்டமைப்புடன், மேடை, வேலிகள், தடுப்புகள், சுகாதார வசதிகள், ஒலி, ஒளி, மின்சார அமைப்புகள் முதலியவற்றை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மிக அவசர கதியில் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கும். அல்லது நிறைவேற்றாத நிலை ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள நேர்வுகளில், பாதுகாப்பு உள்ளிட்ட, பிற வசதிகள் குறைபாடுகளோடு நிகழ்வுகள் / கூட்டங்கள் நடைபெறும் வாய்ப்புகள் ஏற்படலாம். அவற்றை முன்கூட்டியே தவிர்க்க, மக்களுக்கான பாதுகாப்பு, பிற வசதிகளை உறுதிப்படுத்த வலுவான ஏற்பாடு எஸ்.ஓ.பி.யில் இல்லையே. அப்படியுள்ள சூழல்களில் நிகழ்வை நிறுத்தலாமா? தள்ளி வைக்கலாமா? என்பதை (கரூர் நினைவிலாவது) எஸ்.ஓ.பி. உறுதிப்படத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். நிலையான செயல்முறைகள் வேறெதற்கு?

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாட்டில் 5,000 பேர்களுக்கு அதிகமான கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும். மத வழிபாட்டுத்தலங்களில் கூடும் கூட்டங்களுக்குப் பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் மத நிகழ்வுகளில், வழிபாட்டுத் தலங்களில் அதிக மனித உயிர்கள் இழப்புகள் நிகழ்ந்துள்ள வரலாற்றை நோக்கும்போது, இந்த நெறிமுறைகளில் மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு விலக்கு அளித்திருப்பது சரியல்ல.

விண்ணப்பத்திற்கான அனுமதி அளிக்கும்போது 18 வகை நிபந்தனைகளும், (படிவம்-5) தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்வு நடப்பதற்கு முன்போ அல்லது நிகழ்வின்போதோ அத்தகைய நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் உடனடியான நிவர்த்திக்கோ, தண்டிக்கவோ, வழியைக் காணோம். நிகழ்வை ரத்து செய்யவும் எஸ்.ஓ.பி. மூலம் அதிகாரம் அளிக்கப்படவேண்டும். நிகழ்வு நடந்தபின், விசாரணை, வழக்குகள் நடத்துவது என்ன பயன் தரும்?

நிகழ்வு / கூட்டம் நடைபெற்றபின் இழப்புகள், சேதங்கள், திடக்கழிவு அகற்றுதல் முதலியவற்றுக்கான மதிப்பீடுகளைச் செய்து, அதனடிப்படையில் கூட்ட ஏற்பாட்டாளர்களிடமிருந்து அபராதம் அல்லது இழப்பீட்டுத் தொகை நிர்ணயித்துப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, விண்ணப்பத்துடன், நியாயமான அளவு முன் பணத்தை வைப்புத்தொகையாக நிர்ணயிப்பது நடைமுறைக்கு எளிதாகும்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும்; அதனை வளர்க்கும்.

ஒரு வழியாக எஸ்ஓ.பி. வெளியாகியுள்ளதை வரவேற்கலாம். அதனை எந்த விலக்குகளுக்கும் யாருக்காகவும் இடமளிக்காமல், 'மக்கள் பாதுகாப்பே தலை' எனக்கொண்டு உரிய துறைகளின் அலுவலர்கள் உறுதிப்படச் செயல்படுத்த வேண்டும். இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள தேவைகளும், எஸ்.ஓ.பி.யை நடைமுறைப்படுத்.தும் போது பெறக்கூடிய அனுபவங்களும் வருங்காலத்தில் அதன் திருத்தங்களுக்கும் செம்மைக்கும் வழியமைக்கும் என எதிர்பார்ப்போம்.

[Regarding the issue  of new SOPs in the wake of the tragic incident -Sep 2025-  in Karur.]